1300 நீர்வளத்துறை பொறியாளர்களுக்கு பதவி உயர்வில் பாரபட்சம் என வேதனை
1300 நீர்வளத்துறை பொறியாளர்களுக்கு பதவி உயர்வில் பாரபட்சம் என வேதனை
ADDED : மார் 01, 2024 06:47 AM
மதுரை : பொதுப்பணித்துறையில் விரைவாகவும் நீர்வளத் துறையில் நான்காண்டுகள் தாமதமாகவும் பதவி உயர்வு கிடைப்பதாக நீர்வளத்துறை பொறியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அவர்கள் கூறியதாவது:
அரசு தேர்வாணையம் மூலம் கடந்த 2007ல் உதவி பொறியாளர்களாக பணி நியமனம் பெற்றோம். பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத் துறையில் ஒரே சம்பளத்தில் ஒரே நேரத்தில் நியமிக்கப்பட்டோம். ஆனால் பொதுப்பணித் துறையில் தற்போது 2011ம் ஆண்டு வரைக்குமான உதவி பொறியாளர்களுக்கு உதவி செயற்பொறியாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 2007 முதல் தற்போது வரை பதவி உயர்வு, சம்பள உயர்வு இன்றி ஒரே பணியில் நீடிக்கிறோம்.
பொதுப்பணித்துறையில் இருந்து நீர்வளத் துறையை பிரித்தபோது பொறியாளர்கள் மட்டும் பிரிக்கப்பட்டனர்.
பொறியாளர்கள் பொதுப்பணி துறையில் இருந்து நீர்வளத் துறைக்கோ நீர்வளத் துறையில் இருந்து போது பொதுப்பணித்துறைக்கோ இடம் மாற முடியாத அளவுக்கு விதி உள்ளது. அதே நேரத்தில் அயல் பணியாக அக்ரி மார்க்கெட்டிங், மீன்வளத்துறை, ஹிந்து சமய அறநிலையத்துறை ஆகியவற்றில் பொறியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். நீர்வளத் துறையில் 2007ல் சேர்ந்து தற்போது வரை பதவி உயர்வு பெறாத எங்களுக்கு காலிப் பணியிடம் இல்லை என்ற காரணத்தை காட்டி பதவி உயர்வு வழங்க மறுக்கின்றனர். அதற்கு பதிலாக பதவி உயர்வு வழங்கிய பின் அயல் பணியிடங்களுக்கு எங்களை நியமிக்க வேண்டும் என்றனர்.

