'அம்ரித் பாரத்' திட்டப்பணி 15 ரயில் நிலையங்கள் தயார்
'அம்ரித் பாரத்' திட்டப்பணி 15 ரயில் நிலையங்கள் தயார்
ADDED : ஜன 03, 2026 02:26 AM

சென்னை: 'அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தில், தெற்கு ரயில்வேயில் 15 ரயில் நிலையங்களில் பணிகள் முடிக்கப்பட்டு, அவை திறப்பதற்கு தயாராக உள்ளன' என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரயில்வேயில், 'அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டம்' கீழ், முதல்கட்டமாக 508 ரயில் நிலையங்களை, 24,470 கோடி ரூபாயில் மேம்படுத்தும் பணிகள் கடந்த ஓராண்டாக நடந்து வருகின்றன. தெற்கு ரயில்வேயில் 105 ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன .
இவை குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வேயில் 105 ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன; 13 ரயில் நிலையங்களில் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வந்துள்ளன. அடுத்த கட்டமாக, சென்னை கடற்கரை, பூங்கா, மாம்பலம், கிண்டி, திரிசூலம், குரோம்பேட்டை, கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, பெரம்பூர், அம்பத்துார், திருவள்ளூர், அரக்கோணம், ஜோலார்பேட்டை, கும்மிடிப்பூண்டி, திருத்தணி ஆகிய 15 ரயில் நிலையங்களிலும் மேம்பாட்டு பணிகள் முடிந்து தயாராக உள்ளன.
இந்த ரயில் நிலையங்களில் லிப்ட், நடை மேம்பாலம், கூடுதல் நடைமேடை, பயணியர் காத்திருப்பு அறைகள், நுழைவாயில்கள் சீரமைப்பு, எஸ்கலேட்டர்கள், மல்டி லெவல் பார்க்கிங், 'சிசிடிவி' கேமரா உள்ளிட்ட வசதிகள் இடம் பெறும். மேற்கண்ட 15 ரயில் நிலையங்கள் விரைவில் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

