ADDED : மார் 19, 2024 10:12 PM
சென்னை:கோடை விடுமுறையையொட்டி, 30 சிறப்பு ரயில்கள் 150 சர்வீஸ்களாக இயக்கப்படுவதாக, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோடை விடுமுறையையொட்டி, ஏப்ரல், மே மாதங்களில், பொதுமக்கள் அதிகளவில் வெளியூர் பயணம் செல்வர் மற்றும் சுற்றுலா செல்வர். பயணியரின் தேவைக்கு ஏற்றார் போல, சிறப்பு ரயில்கள் இயக்குவது, விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைத்து இயக்குவது போன்ற நடவடிக்கைகளை, ரயில்வே மேற்கொள்ள உள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
பயணியரின் தேவைக்கு ஏற்ப, தாம்பரம் - திருநெல்வேலி மற்றும் செங்கோட்டை, சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவில், கன்னியாகுமரி, வேளாங்கண்ணி, சென்னை சென்ட்ரல் - கோவை, திருவனந்தபுரம், -மங்களூரு, கொச்சுவேலி, -எஸ்.எம்.வி.டி., பெங்களூரு உட்பட பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். அதாவது, 30 சிறப்பு ரயில்கள் 150 சர்வீஸ்களாக இயக்கப்படுகின்றன.
இதற்கான, கால அட்டவணை தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சிறப்பு ரயில்கள் மட்டுமின்றி, வழக்கமான ரயில்களில் காத்திருப்போர் பட்டியலை குறைக்கும் விதமாக, கூடுதல் பெட்டிகளும் இணைத்து இயக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

