ADDED : டிச 20, 2025 06:24 AM

சென்னை: பருல் பல்கலையில், பல்வேறு துறை பிரபலங்களின் முன், 16,000 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.
குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள பருல் பல்கலையின், 9வது பட்டமளிப்பு விழா சமீபத்தில் நடந்தது. இதில், 16,000 மாணவர்கள் தங்கள் பெற்றோர் மற்றும் நண்பர்களுடன் பங்கேற்று பட்டம் பெற்றனர்.
சிறப்பிடங்களைப் பெற்ற 104 பேருக்கு தங்கப்பதக்கம்; 44 பேருக்கு தகுதிச் சான்றிதழ்கள்; மூன்று முன்னாள் மாணவர்களுக்கு தொழில் முனைவோருக்கான பதக்கங்கள்; 135 பேருக்கு முனைவர் பட்டங்கள் வழங்கப்பட்டன.
பட்டதாரிகளிடம், பல்கலை தலைவர் தேவன்ஷு எதிர்கால சவால்களை சமாளிப்பது குறித்து பேசினார்.
நிகழ்ச்சியில், உள்துறை இணை அமைச்சர்களான நித்யானந்த் ராய், பந்தி சஞ்சய் குமார், குஜராத் துணை முதல்வர் ஹர்ஷ் சங்வி, ஊடகவியலாளர் ரஜத் சர்மா, ஒலிம்பிக் குத்துச்சண்டை வீராங்கனை எம்.சி.மேரிகோம், நீதிபதி வினீதா சிங், உலக டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்று, புதிய பட்டதாரிகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில், தங்களின் துறை சார்ந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
இந்த விழாவில், 16,000 கைவினைஞர்கள் நெய்த காதி சால்வைகள் அணிவிக்கப்பட்டு, சிறப்பு விருந்தினர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

