தாசில்தாரை தாக்கியதாக பதிவான வழக்கு மு.க.அழகிரி உட்பட 17 பேர் விடுதலை
தாசில்தாரை தாக்கியதாக பதிவான வழக்கு மு.க.அழகிரி உட்பட 17 பேர் விடுதலை
ADDED : பிப் 16, 2024 10:12 PM

மதுரை:மதுரை மாவட்டம் மேலுார் அருகே, 2011 சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, அப்போதைய தாசில்தாரை தாக்கியதாக பதிவான வழக்கிலிருந்து முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மற்றும் தி.மு.க.,வினர் உட்பட 17 பேரை மதுரை நீதிமன்றம் விடுதலை செய்தது.
கடந்த, 2011 சட்டசபை தேர்தலின் போது, பிரசாரத்திற்காக தி.மு.க., சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, மதுரை மாவட்டம் மேலுார் அருகே அம்பலக்காரன்பட்டி கோவிலுக்கு வந்து அக்கட்சியினரை சந்தித்தார்.
4 பேர் இறப்பு
தேர்தல் விதிகள் மீறப்படுவதாகக் கூறி, வீடியோ எடுக்க அப்போதைய தாசில்தார் காளிமுத்து உத்தரவிட்டார். இதனால், தி.மு.க.,வைச் சேர்ந்த சிலர் தன்னை தாக்கியதாக கீழவளவு போலீசில் புகார் அளித்தார்.
அழகிரி, மதுரை மாநகராட்சி முன்னாள் துணைமேயர் மன்னன் மற்றும் தி.மு.க.,வைச் சேர்ந்த ரகுபதி உட்பட 21 பேர் மீது சட்ட விரோதமாகக் கூட்டம் சேர்த்தல், கடமையை செய்யவிடாமல் பொது ஊழியரை தடுத்தல், உத்தரவிற்கு கீழ்படிய மறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது.
மதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்றமான ஜெ.எம்., 1ல் விசாரணை நடந்தது. வழக்கு நிலுவையிலிருந்த காலகட்டத்தில் நான்கு பேர் இறந்தனர். விசாரணை முடிந்து தீர்ப்பிற்காக ஒத்திவைக்கப்பட்டது. நேற்று அந்நீதிமன்றத்தில் அழகிரி, மன்னன் மற்றும் தி.மு.க.,வைச் சேர்ந்த ரகுபதி உள்ளிட்டோர் ஆஜராகினர்.
ஆதாரம் இல்லை
வழக்கை விசாரித்த நீதிபதி முத்துலட்சுமி, 'அழகிரி உள்ளிட்ட 17 பேரும் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுதலை செய்யப்படுகின்றனர்' என உத்தரவிட்டார்.
அழகிரி தரப்பு வழக்கறிஞர் மோகன்குமார் கூறுகையில், ''அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை; வீடியோ பதிவில் ஆதாரம் எதுவும் இல்லை என வழக்குப்பதிவு செய்த சில நாட்களிலேயே, புகார்தாரர் காளிமுத்து தெரிவித்துள்ளார். அரசியல் காரணங்களுக்கான வழக்கு இது. நீதி வென்றது,'' என்றார்.