ADDED : மார் 24, 2026 04:35 AM
சென்னை: நாடு முழுதும் நடந்த ஆய்வில், 194 மருந்துகள் தரமற்றவையாகவும், நான்கு மருந்துகள் போலி எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து மாத்திரைகளும், மத்திய மற்றும் மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள் வாயிலாக ஆய்வு செய்யப்படுகின்றன. அதில், தரமற்ற மற்றும் போலி மருந்துகள் கண்டறியப்பட்டு வருகின்றன.
அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில் உயர் ரத்த அழுத்தம், காய்ச்சல், சளி, கிருமி தொற்று, அஜீரண பிரச்னைகள் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும், 194 மருந்துகள் தரமற்றவையாகவும், நான்கு மருந்துகள் போலியானவையாகவும் இருந்துள்ளன.
அந்த விபரங்கள், மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியத்தின், https://cdsco.gov.in/என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.
இந்த விபரங்களை, பொது மக்கள் பார்த்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என, மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
