மின்சார ரயிலில் கத்தியால் குத்தி மொபைல்போன் திருடிய 2 பேர் கைது
மின்சார ரயிலில் கத்தியால் குத்தி மொபைல்போன் திருடிய 2 பேர் கைது
ADDED : மார் 15, 2024 07:10 PM

சென்னை:மின்சார ரயிலில் கத்தியால் குத்தி, பணம், மொபைல்போன் திருடிய இரண்டு பேரை, ஆயுதங்களுடன் ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி சேர்ந்த மவுலீஸ், 24, என்பவர் கடந்த 6ம் தேதி, தன் மூன்று நண்பர்களுடன், சென்னை கடற்கரையில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை, மின்சார ரயிலில் பயணம் செய்துள்ளார்
கவரப்பேட்டை ரயில் நிலையம் வந்தபோது, திடீ ரென ஐந்து பேர் ரயிலில் ஏறி, பயணியரிடம், மொபைல்போன், பர்சை கேட்டுள்ளனர். தர மறுத்ததால், மவுலீஸ் மற்றும் அவரது மூன்று நண்பர்களையும் கத்தியால் குத்தி காயப்படுத்தி, நான்கு மொபைல்போன்கள் மற்றும் 5,500 ரூபாயை பறித்து, தப்பி விட்டனர்.
இது குறித்து, மவுலீஸ் கொடுத்த புகாரின்படி, கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் சசிகலா விசாரணை நடத்தினார்.
பின், ரயில்வே எஸ்.பி., ரமேஷ் தலைமையிலான தனிப்படையினர், சம்பவத்தில் ஈடுபட்டவர் களை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த வழக்கில் தேடப்பட்ட கும்மிடிப்பூண்டியை சேர்ந்த லெவின், 26, திருப்பாலைவனம் பகுதியை சேர்ந்த விஜி, 24, ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து இரண்டு சுத்தியல்களைக் கைப்பற்றினர். இருவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தலைமறைவாக உள்ள கணேஷ், 27, பிரவீன் 27, வெங்கடேஷ், 25, ஆகியோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

