ADDED : அக் 10, 2024 08:52 PM
சென்னை:பொதுத்துறை ஊழியர்களுக்கு, 20 சதவீத போனஸ் வழங்குவதற்காக, 369 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு:
பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளிக்கும் வகையில், 2023 - 24ம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கருணைத்தொகை
லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும், 'சி' மற்றும் 'டி' பிரிவு தொழிலாளர்களுக்கு, அந்தந்த நிறுவனங்களால் ஒதுக்கக்கூடிய உபரி தொகையை கணக்கில் கொண்டு, 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 11.6 சதவீதம் கருணைத்தொகை என, 20 சதவீதம் வழங்கப்படும்.
தமிழக மின் வாரியம், அரசு போக்குவரத்து கழகங்கள், நுகர்பொருள் வாணிப கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள், தமிழக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் பணிபுரியும் தகுதியுடைய, சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 11.6 சதவீதம் கருணைத்தொகை சேர்த்து, 20 சதவீதம் வழங்கப்படும்.
உபரி தொகை இல்லாத பொதுத்துறை நிறுவனங்களில், சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு, 8.33 சதவீதம் குறைந்தபட்ச போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத்தொகை சேர்த்து, 10 சதவீதம் வழங்கப்படும்.
வீட்டு வசதி வாரியம், சென்னை குடிநீர் வாரியத்தில், சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத் தொகை வழங்கப்படும்.
369 கோடி ரூபாய்
தமிழக குடிநீர் வடிகால் வாரியத்தில், சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு, 8.33 சதவீதம் போனஸ் வழங்கப்படும்.
நுகர்பொருள் வாணிப கழக தற்காலிக தொழிலாளர்களுக்கு, 3,000 ரூபாய் கருணைத் தொகை வழங்கப்படும்.
மொத்தத்தில், போனஸ் பெற தகுதியுள்ள நிரந்தர தொழிலாளர்கள், குறைந்தபட்சம் 8,400 முதல் அதிகபட்சமாக 16,800 ரூபாய் வரை பெறுவர்.
பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2.75 லட்சம் தொழிலாளர்களுக்கு, 369 கோடி ரூபாய் போனஸ் மற்றும் கருணைத் தொகையாக வழங்கப்படவுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.