பிரதமர் கவுரவ நிதி உதவியில் முறைகேடு விதிமீறி பெற்ற 20 சதவீதம் பேர் நீக்கம்
பிரதமர் கவுரவ நிதி உதவியில் முறைகேடு விதிமீறி பெற்ற 20 சதவீதம் பேர் நீக்கம்
ADDED : ஜூலை 20, 2025 07:12 AM
கம்பம்: தேனி மாவட்டத்தில், பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான கவுரவ நிதி உதவி திட்டத்தில், பயனாளிகள், 20 சதவீதம் பேர் விதிகளுக்கு புறம்பாக ஊக்கத்தொகை பெறுவது கண்டறிந்து, அவர்களுக்கு வழங்கி வந்த ஊக்கத்தொகை நிறுத்தப்பட்டுள்ளது.
சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டிற்கு, 6,000 ரூபாய் வழங்கும், 'பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி' திட்டம் 2019 பிப்ரவரி முதல் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தில் விண்ணப்பித்த விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை, 2,000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக மொத்தம், 6,000 ரூபாய் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது.
இதனால், நாடு முழுதும் கோடிக்கணக்கான விவசாயிகள் பயன்பெறுகின்றனர்.
இத்திட்டத்தில் பயனாளிகளின் ஆதார், வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டவுடன், அவர்களின் முழு தகவல்களும் அரசின் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டது.
அவ்வாறு கண்காணிப்பு செய்ததில், அரசு வேலை பார்ப்பவர், வருமான வரி கட்டுபவர், ஒரே வீட்டில் இரு பயனாளிகள் கவுரவ நிதி பெற்றதும், இறந்து போனவர்கள் பெயரில் நிதி பெற்று வந்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் திட்ட பயனாளிகள், 20 சதவீதம் பேருக்கு ஊக்கத்தொகை நிறுத்தப்பட்டு விட்டது.
ஒரு வட்டாரத்திற்கு 4,000 முதல் 6,000 விவசாயிகள் ஊக்கத்தொகை பெற்று வருகின்றனர். ஒவ்வொரு வட்டாரத்திலும், 20 சதவீதம் பேர், அதாவது 800 பேர் விதிகளுக்கு புறம்பாக நிதி உதவி பெறுவது கண்டறியப்பட்டு, அவர்களுக்கு நிதி வழங்குவது நிறுத்தப்பட்டு விட்டது.
மேலும், 2019க்கு பின் புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கும் இத்திட்டத்தில் ஊக்கத்தொகை கிடைக்கவில்லை என, விவசாயிகள் கூறுகின்றனர்.
வேளாண் அதிகாரிகள் கூறுகையில், 'விதிகளுக்கு புறம்பாக ஊக்கத்தொகை பெற்ற 20 சதவீதம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
'ஆதார் இணைப்பு மற்றும் இ.கே.ஒய்.சி. பதிவுகள் மூலம் தரவுகள் பெறப்பட்டு நீக்கப்பட்டனர். 2019க்கு பின் புதிய விண்ணப்பங்களுக்கு இதுவரை அனுமதி இல்லை.
'விதிமுறைகளுக்குட்பட்ட சிறு, குறு விவசாயிகளுக்கு எந்த தடையுமின்றி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது' என்றனர்.