டெண்டர் விட்ட பணிகளுக்கு ஆளுங்கட்சி முட்டுக்கட்டை; அ.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர்கள் 20 பேர் புகார்
டெண்டர் விட்ட பணிகளுக்கு ஆளுங்கட்சி முட்டுக்கட்டை; அ.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர்கள் 20 பேர் புகார்
ADDED : டிச 24, 2024 03:26 AM

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் டெண்டர் விட்ட பணிகளை நடத்த விடாமல் ஆளுங்கட்சியினர் முட்டுக்கட்டை போடுவதாக வெம்பக்கோட்டை ஒன்றியத்தின் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் 20 பேர் கலெக்டரிடம் புகார் அளித்தனர்.
விருதுநகர் மாவட்ட 11 ஒன்றியங்களில் ஒன்று மட்டுமே தற்போது அ.தி.மு.க., வசம் உள்ளது. மொத்தமுள்ள 20 கவுன்சிலர்களும் அ.தி.மு.க.,வை சேர்ந்தவர்கள்.
இங்கு பேவர் பிளாக், வாறுகால், சிறுபாலங்கள், குளியல் தொட்டிகள் என பணிகளுக்கு ரூ.89 லட்சத்திற்கு டெண்டர் வைக்கப்பட்டது. இந்த பணிகளை கடந்த வாரம் மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
இதையடுத்து நேற்று கலெக்டர் ஜெயசீலனிடம், பணிகளை தொடர அனுமதிக்க கோரி மனு அளித்தனர்.
ஒன்றியக்குழு தலைவர் பஞ்சவர்ணம், துணை தலைவர் ராமராஜ் பாண்டியன் கூறியதாவது: ஆளுங்கட்சியினர் (தி.மு.க.,வினர்) பணிகளை நிறுத்த உத்தரவிட்டுள்ளனர். கலெக்டரிடம் மனு அளித்தும் பல்வேறு காரணங்களை சுட்டி காட்டி நிராகரிக்கின்றனர்.
இதே நிலை நீடித்தால் போராட்டம் நடத்துவோம்.
தீர்மானம் போட்டு பணிகள் ஒதுக்கி, பி.டி.ஓ.,க்கள் அனுமதி அளித்து 2 மாதங்கள் ஆகிறது. இப்போது நிறுத்த கூறுவது நியாயமல்ல.
தற்போது உபரிநிதியாக ரூ.5 கோடியே 44 லட்சம் உள்ளது.
நேற்று கூட ஸ்ரீவில்லிபுத்துார் ஒன்றியத்திற்கு ரூ.70 லட்சத்திற்கு பணிகளுக்கு அனுமதி அளித்துள்ளனர், என்றனர்.
மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறியதாவது:
ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பணிகள் முன்னுரிமை பட்டியலில் இல்லாத பணிகள் என தெரிய வந்ததை அடுத்து அது குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.