வேலுாரில் பெண் மருத்துவருக்கு பாலியல் வன்கொடுமை: சிறுவனுக்கு 20 ஆண்டு சிறை!
வேலுாரில் பெண் மருத்துவருக்கு பாலியல் வன்கொடுமை: சிறுவனுக்கு 20 ஆண்டு சிறை!
ADDED : பிப் 18, 2025 07:15 PM

வேலுார்: வேலுாரில் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய சிறுவனுக்கு, 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
அளி்த்தது. ஏற்கனவே இந்த வழக்கில் தொடர்புடைய நால்வருக்கு நீதிமன்றத்தில் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐந்தாவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த சிறுவனுக்கு இன்று தண்டனை விதிக்கப்பட்டது.
வேலுார், காட்பாடி சி.எம்.சி., மருத்துவமனையில் பணிபுரிந்த பீஹாரைச் சேர்ந்த பெண் டாக்டர், நாக்பூரை சேர்ந்த ஆண் டாக்டர் இருவரும் 2022 மார்ச், 16ல் காட்பாடியில் சினிமா பார்த்து விட்டு அறைக்கு திரும்பினர்.
வழியில் இருவரையும் ஐந்து பேர் கொண்ட கும்பல் ஆட்டோவில், வேலுார், பாலாறு பகுதிக்கு கடத்தி, 40,000 ரூபாய், 2 சவரன் நகை மற்றும் மொபைல்போனை பறித்தனர். பின்னர், ஆண் டாக்டரை தாக்கி, பெண் டாக்டரை அந்த கும்பல் கூட்டு பலாத்காரம் செய்து தப்பினர்.
பெண் டாக்டர் ஆன்லைனில், வேலுார் எஸ்.பி., அலுவலகத்திற்கு புகார் அளித்தார். வேலுார் வடக்கு போலீசார், சத்துவாச்சாரி வ.உ.சி., நகர் ஆட்டோ டிரைவர் பார்த்திபன், கூலித்தொழிலாளி மணிகண்டன், பரத், சந்தோஷ் மற்றும் 17 வயது சிறுவன் என ஐந்து பேரை கைது செய்தனர்.
வேலுார் மகளிர் நீதிமன்றத்தில் ஜன.30 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதி மகேஸ்வரி பானு ரேகா, குற்றவாளிகளுக்கு தலா, 20 ஆண்டுகள் சிறை, தலா, 25,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
இவ்வழக்கில் இன்னொரு குற்றவாளியான சிறுவனுக்கு இன்று 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

