பசுமை தமிழகம் இயக்கம் வாயிலாக 2.24 கோடி பனை விதைகள் நடவு
பசுமை தமிழகம் இயக்கம் வாயிலாக 2.24 கோடி பனை விதைகள் நடவு
ADDED : டிச 04, 2025 05:34 AM

சென்னை: 'பசுமை தமிழகம் இயக்கம் வாயிலாக, 2.24 கோடி பனை விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளன' என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் பசுமை பரப்பை அதிகரிக்க, மரக்கன்றுகள் நடுவதற்காக, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த, 2022ல் பசுமை தமிழகம் இயக்கம் துவங்கப்பட்டது.
இதன் வாயிலாக, தமிழகத்தில் வனப்பகுதிகள் மட்டுமின்றி, காலியாக உள்ள அரசு மற்றும் தனியார் நிலங்களிலும், மரம் வளர்க்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இதுகுறித்து, வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் பனை வளர்ப்பு என்பது, பாரம்பரியமாக நடந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, 5.19 கோடி பனை மரங்கள், தமிழகத்தில் உள்ளன.
நாடு முழுதும் உள்ள, பனை மரங்களின் மொத்த எண்ணிக்கையில், 50 சதவீதம் தமிழகத்தில் உள்ளன. இந்நிலையில், பசுமை தமிழகம் இயக்கம் வாயிலாக, 2.24 கோடி பனை விதைகள், 16,600 தன்னார்வலர்கள் வாயிலாக நடவு செய்யப்பட்டுள்ளன.
பெரம்பலுார், திருச்சி, புதுக்கோட்டை, அரியலுார், திருப்பத்துார், சிவகங்கை, ஈரோடு, சேலம், நாகப்பட்டினம் மாவட்டங்களில், அதிக அளவில் பனை விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளன; இவை நடப்பட்ட இடங்கள், 'ஜியோ டேக்' முறையில் தொடர் கண்காணிப்புக்கு உட்படுத்தப் பட்டுள்ளன.
இதனால், பனை விதைகள் வளர்ச்சி குறித்த விபரங்களை ஆவணப்படுத்த வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

