காரைக்கால் மீனவர்கள் 26 பேர் விடுதலை : 3 பேருக்கு சிறை
காரைக்கால் மீனவர்கள் 26 பேர் விடுதலை : 3 பேருக்கு சிறை
ADDED : நவ 10, 2025 11:26 PM
ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் உள்ள காரைக்கால் மீனவர்கள் 26 பேரை விடுதலை செய்தும், 3 பேருக்கு சிறை தண்டனை விதித்தும் ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செப்., 28, அக்.,9 ல் காரைக்காலில் இருந்து ஆழ்கடல் விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், இலங்கை நெடுந்தீவு அருகே மீன்பிடித்த போது, அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
நேற்று மீனவர்களை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். இதில் 26 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். மீதியுள்ள மூவரில் 2 பேர் படகு டிரைவர்கள், ஒருவர் படகு உரிமையாளர் என்பதால் அவர்களுக்கு தலா 6 மாதங்கள் சிறை தண்டனையும், தலா ரூ.40 லட்சம் அபராதம் (இந்திய மதிப்பில் தலா ரூ.11லட்சத்து 60 ஆயிரம்) விதித்தும், அபராதத்தை செலுத்த தவறினால் கூடுதலாக 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். விடுவிக்கப்பட்ட 26 மீனவர்களும் கொழும்பு அருகே மெரிகானா முகாமில் தங்க வைக்கப்பட்டனர். தண்டனை பெற்ற மூவரை வெலிக்கடை சிறையில் போலீசார் அடைத்தனர்.

