தீபாவளி பண்டிகைக்கு 275 சிறப்பு இணைப்பு பஸ்கள்: தமிழக அரசு அறிவிப்பு
தீபாவளி பண்டிகைக்கு 275 சிறப்பு இணைப்பு பஸ்கள்: தமிழக அரசு அறிவிப்பு
UPDATED : அக் 15, 2025 09:58 PM
ADDED : அக் 15, 2025 09:42 PM

சென்னை:சென்னையில் தீபாவளியை ஒட்டி வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக நாளை முதல்(அக்டோபர் 16) வரும் 19ம் தேதி வரை 4 நாட்களுக்கு கூடுதலாக 275 சிறப்பு இணைப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
அக்டோபர் 20 அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைத்திடவும், வெளியூர் செல்லும் பயணிகள் எளிதாக பயணிக்கும் வகையில் எதிர்வரும் 16.10.2025 முதல் 19.10.2025 ஆகிய 4 நாட்களுக்கும் வெளியூர் செல்லும் பஸ்கள் கீழ்க்குறிப்பிட்டுள்ள மூன்று இடங்களில் இருந்து புறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக போக்குவரத்து கழகம் அறிக்கை:
1. கிளாம்பாக்கம் பஸ் நிலையம்
2. கோயம்பேடு பஸ் நிலையம்
3. மாதவரம் புறநகர் பஸ் நிலையம்
சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து மேற்குறிப்பிட்ட மூன்று பஸ் நிலையங்கள், பகுதிகளுக்கு மாநகர பஸ்கள் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகின்றன. எனினும் எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர் பயணிகள் மேற்குறிப்பிட்டுள்ள மூன்று பஸ் நிலையங்களுக்கு எளிதாக சென்று வெளிமாவட்ட நீண்ட தூர பஸ்களை பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக மாநகர போக்குவரத்துக்கழகம் கூடுதலாக 275 சிறப்பு இணைப்பு பஸ்கள் அக்டோபர் 16 முதல் 19 ம் தேதி வரை ஆகிய 4 நாட்களில் இயக்கபட உள்ளது.
இவ்வாறு தமிழக போக்குவரத்து கழகம் அறிக்கையில் கூறியுள்ளது.