ADDED : மார் 04, 2024 04:44 AM
சென்னை, : தமிழகத்தில் ஆண்டுதோறும், ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில், பறவைகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும். இதன்படி, கடந்த ஜன., 27, 28ல், 894 நீர் நிலைகளில் நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், 6.80 லட்சம் பறவைகள் இருப்பதாக விபரங்கள் திரட்டப்பட்டன.
இந்நிலையில், 2ம் கட்டமாக நில பகுதிகளில் காணப்படும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு, சனி, ஞாயிறான நேற்று முன்தினமும், நேற்றும் நடந்தது. தமிழகம் முழுதும், 800க்கும் மேற்பட்ட இடங்களில், சரணாலயங்கள், காப்பு காடுகள், பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்தது.
இதில், வாலாட்டிகள், வல்லுாறுகள், சிட்டுக்குருவிகள், மரங்கொத்திகள், மாங்குயில், செண்பகப்பறவை உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் காணப்பட்டன.
இதுகுறித்த விபரங்கள் மாவட்ட வாரியாக திரட்டப்பட்டு, ஒருங்கிணத்த பின் அதிகாரப்பூர்வ புள்ளி விபரங்கள் வெளியிடப்படும் என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

