மெரினாவில் ரூ.17 லட்சம் வழிப்பறி செய்த 3 'டூபாக்கூர்' போலீசார் கைது
மெரினாவில் ரூ.17 லட்சம் வழிப்பறி செய்த 3 'டூபாக்கூர்' போலீசார் கைது
ADDED : பிப் 16, 2025 07:21 AM

சென்னை : ராயப்பேட்டை, ஜானிகான் 1வது தெருவைச் சேர்ந்தவர் மகாதீர் முகமது, 27. இவரது சகோதரர் அஸ்மத், 32; தனியார் நிறுவன மேலாளர்.
ராயப்பேட்டையில் உள்ள தனியார் வங்கியில் வைப்பு தொகை செலுத்துவதற்காக, அஸ்மத் தன் சகோதரர் மகாதீர் முகமதுவிடம், கடந்த 10ம் தேதி 17 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். பணத்தை எடுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் மகாதீர் முகமது சென்று கொண்டிருந்தார்.
மெரினா காமராஜர் சாலையில், பார்த்தசாரதி கோவில் நுழைவாயில் அருகே பிற்பகல் 3:50 மணியளவில் சென்றபோது, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த மூன்று பேர் அவரை மடக்கினர்.
போலீசார் எனக்கூறி அறிமுகப்படுத்தியவர்கள், வாகனத்தை சோதனை செய்து, மகாதீர் முகமது வங்கியில் செலுத்த எடுத்து சென்ற பணத்தை கைப்பற்றினர்.
பணத்திற்கான ஆவணங்கள் உள்ளதா எனக் கேட்டபோது, மகாதீர் முகமது இல்லை என்றதும், பணம் மற்றும் மொபைல் போனை வாங்கியவர்கள், மெரினா காவல் நிலையத்தில் ஆவணங்களை சமர்ப்பித்து, பெற்று செல்லுமாறு கூறி சென்றனர்.
இதையடுத்து, மெரினா காவல் நிலையத்திற்கு மகாதீர் முகமது சென்றார். அப்போது, பணத்தை பறிமுதல் செய்தது போலீசார் இல்லை என்பது தெரிய வந்தது.
மெரினாவில் பட்டப்பகலில் போலீஸ் எனக்கூறி வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம், காவல் துறை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, போலி போலீசார் குறித்து மெரினா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில், மகாதீர் முகமதுவின் மொபைல் போன் சிக்னல், அபிராமபுரம் காவல் எல்லைக்கு உட்பட்ட கிரசன்ட் அவென்யூ தெருவில் உள்ள ஒரு வீட்டை காண்பித்தது. மொபைல் போனை மீட்ட போலீசார், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து திருடர்கள் குறித்து விசாரித்தனர்.
இதில், கோயம்புத்துாரைச் சேர்ந்த பவா, 31, விஜயராஜ், 34, மற்றும் துாத்துக்குடியைச் சேர்ந்த அருண் தமிழ்ச்செல்வன், 24, ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, மூவரையும் அவர்களது சொந்த ஊரில் வைத்து போலீசார் கைது செய்தனர். 1.75 லட்சம் ரூபாய், 6 சவரன் நகை, 1.60 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப்பொருட்கள், நான்கு மொபைல் போன்கள், இரண்டு டூ - வீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

