ADDED : ஜன 20, 2024 12:46 AM
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், கண்டிதம்பட்டு பகுதியை சேர்ந்தவர் சந்திரபாபு. கூலி தொழிலாளியான இவர், 2016-ல், தன் நிலத்திற்கான கூட்டு பட்டாவை, தனி நபர் பட்டாவாக மாற்றக்கோரி விண்ணப்பம் செய்தார்.
அப்போது, கண்டிதம்பட்டு வி.ஏ.ஓ.,வாக பணியாற்றிய சங்கீதா, 43, என்பவர் அதற்கு, 3,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத சந்திரபாபு, தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார்.
வழக்குப்பதிவு செய்த போலீசார், வி.ஏ.ஓ., சங்கீதா லஞ்சம் வாங்கிய போது கைது செய்து, சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு, கும்பகோணம் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகப்பிரியா, லஞ்ச வழக்கில் கைதான வி.ஏ.ஓ., சங்கீதாவுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.