ADDED : நவ 29, 2024 11:39 PM
சென்னை:'ரயில்களில் கற்பூரம் ஏற்றி வழிபடுவதை தவிர்க்க வேண்டும். மீறினால், மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்' என, தெற்கு ரயில்வே எச்சரித்து உள்ளது.
தெற்கு ரயில்வே அறிக்கை:
சபரிமலை சீசன் துவங்கி உள்ள நிலையில், சிறப்பு ரயில்களில் பக்தர்கள் சிலர், விளக்கு மற்றும் கற்பூரம் ஏற்றி வழிபடுவதாக தெரியவந்துள்ளது. எளிதில் தீ பற்றக்கூடிய பட்டாசுகள், சமையல் எரிவாயு உருளை, அமிலம், பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் போன்றவற்றை ரயில்களில் எடுத்துச் செல்லக்கூடாது.
எனவே, கற்பூரம், விளக்கு போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை ரயில்களில் பயன்படுத்தினால் தண்டிக்கப்படுவர். ரயில்வே சட்டப்படி, மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 1,000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
ரயில்களில் கற்பூரம் மற்றும் விளக்குகள் ஏற்றினால், சக பயணியர் உடனே டிக்கெட் பரிசோதகர், ரயில் பெட்டி உதவியாளர்கள், ரயில் நிலைய மேலாளர்கள், ரயில்வே பாதுகாப்பு படையினரிடம் தகவல் தெரிவிக்கலாம். '139' என்ற உதவி எண்ணிலும் தகவல் சொல்லலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.