30 பக்கங்களில் முதன்மை விடைத்தாள்: பிளஸ் 2 பொது தேர்வில் வழங்க உத்தரவு
30 பக்கங்களில் முதன்மை விடைத்தாள்: பிளஸ் 2 பொது தேர்வில் வழங்க உத்தரவு
ADDED : பிப் 09, 2024 04:55 AM

சென்னை: பிளஸ் 2 பொது தேர்வில், 30 பக்கங்களில் முதன்மை விடைத்தாள் வழங்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் மார்ச்சில் நடக்கின்றன. இதில், பிளஸ் 2 பொது தேர்வு, மார்ச் 1ல் துவங்க உள்ளது.
மாநிலம் முழுதும், எட்டு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள், தேர்வில் பங்கேற்க உள்ளனர். அவர்களுக்கான ஹால் டிக்கெட், இம்மாத கடைசியில் வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில், பிளஸ் 2 பொது தேர்வுகளுக்கு, மாவட்ட வாரியாக முதன்மை காலி விடைத்தாள் கட்டுகள், தேர்வுத்துறையில் இருந்து அனுப்பப்பட்டுள்ளன.
இந்த விடைத்தாள் கட்டுகளில், பாட வாரியாக விடைத்தாள்களை பிரித்து, அதனை மாணவர்களுக்கு வழங்கும் வகையில், தயாரிப்பு பணி மேற்கொள்ள அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, உயிரி தாவரவியல் மற்றும் உயிரி விலங்கியலுக்கு, தலா, 14 பக்கங்களிலும், மொழி பாடங்கள் மற்றும் பிற பாடங்களுக்கு, தலா, 30 பக்கங்களிலும் முதன்மை விடைத்தாள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இவை தவிர, புவியியலுக்கு ஒரு உலக வரைபடம், வரலாற்றுக்கு ஒரு இந்தியா மற்றும் உலக வரைபடம், புள்ளியியல், வணிக கணிதம் பாடங்களுக்கு, குறுக்கு கட்டத்தாள்கள் வழங்கவும் உத்தரவிடப்பட்டுஉள்ளது.

