காஞ்சி, கிருஷ்ணகிரியில் 3,000 படுக்கையுடன் தொழிலாளர் விடுதி
காஞ்சி, கிருஷ்ணகிரியில் 3,000 படுக்கையுடன் தொழிலாளர் விடுதி
ADDED : ஜூன் 14, 2025 10:56 PM
சென்னை:தொழிற்சாலைகள் அதிகரித்து வரும் காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில், 150 கோடி ரூபாயில், 3,000 படுக்கைகளுடன் கூடிய தொழிலாளர்கள் தங்கும் விடுதி கட்ட, அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில், 24 மாவட்டங்களில், எட்டு சிறப்பு பொருளாதார மண்டலங்களை உள்ளடக்கிய, 50 தொழில் பூங்காக்களை, 'சிப்காட்' எனப்படும் தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனம் அமைத்துள்ளது. அவற்றில் உள்ள ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்துள்ளனர். அவர்கள் தங்குமிட வசதிக்கு அதிகம் செலவிடுகின்றனர்.
எனவே, குறைந்த வாடகையில் தங்குமிட வசதியை அரசு ஏற்படுத்தி தருகிறது. தற்போது, காஞ்சிபுரத்தில் பிள்ளைப்பாக்கம், ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் மற்றும் கிருஷ்ணகிரியில் புதிய தொழிற்சாலைகள் அதிகம் வருகின்றன. அதற்கு ஏற்ப தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
எனவே, இரு மாவட்டங்களிலும் தலா இரு இடங்களில் மொத்தம், 3,000 படுக்கைகளுடன் தங்கும் விடுதிகளை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
சமூக நலத்துறையின் தமிழக பணிபுரியும் மகளிர் விடுதி நிறுவனம், 'தோழி' பெயரில் மகளிர் விடுதி அமைத்து வருகிறது. பணிபுரியும் பெண்களுக்கு, குறைந்த வாடகையில் பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய தங்குமிட வசதி வழங்கப்படுகிறது. தற்போது, 16 மாவட்டங்களில், 17 தோழி விடுதிகள் உள்ளன.
மேலும், 13 மாவட்டங்களில் விடுதிகள் அமைக்கப்பட்டு வரும் நிலையில், எஞ்சியுள்ள மற்ற அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு விடுதி கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு விடுதியும் தலா, 50 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட உள்ளது.