பழவேற்காட்டில் 3,000 அரிய வகை வாத்துகள் பலி நீரில் யூரியா கலந்தது காரணமா என்று விசாரணை
பழவேற்காட்டில் 3,000 அரிய வகை வாத்துகள் பலி நீரில் யூரியா கலந்தது காரணமா என்று விசாரணை
ADDED : பிப் 16, 2024 01:19 AM

சென்னை:திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு ஏரியில், 3,000க்கும் மேற்பட்ட அரிய வகை வாத்துகள், உள்ளான்கள் திடீரென இறந்ததாக புகார் எழுந்துள்ளது. விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் யூரியா, ஏரி நீரில் கலந்தது இதற்கு காரணமா என, வனத்துறையினர் விரசரணையை முடுக்கி விட்டு உள்ளனர்.
நாட்டிலேயே இரண்டாவது மிகப் பெரிய உவர் நீர் ஏரியாக பழவேற்காடு அமைந்துள்ளது. இப்பகுதி ஆரணி ஆறு உள்ளிட்ட பல்வேறு சிறு நதிகள், பகிங்ஹாம் கால்வாய் போன்றவற்றின் தொகுப்பாக இந்த ஏரி அமைந்து உள்ளது.
வலசை பறவைகள்
மொத்தம் 481 சதுர கி.மீ., பரப்பளவில் உள்ள இந்த ஏரியில், 153 சதுர கி.மீ., தமிழக எல்லையில் அமைந்துள்ளது. பூநாரைகள், ஊசிவால் வாத்துகள் உள்ளிட்ட பல்வேறு அரிய வகை வலசை பறவைகள் இங்கு வருவது வழக்கம்.
நன்னீர் சார்ந்த பறவைகளும், உவர் நீர் சார்ந்த வலசை பறவைகளும் ஒரே இடத்தில் முகாமிடுவது இதன் தனி சிறப்பாக உள்ளது. இப்பகுதி பறவைகள் சரணாலயமாக அங்கீகரிக்கப்பட்டு, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இங்கு வரும் வலசை பறவைகளை காண, உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணியர் வருவது வழக்கம்.
இந்த பகுதியை சூழலியல் ரீதியாக பாதுகாத்து மேம்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
திடீர் மயக்கம்
இந்நிலையில், பழவேற்காடு ஏரியில் அண்ணாமலைச்சேரியை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஊசிவால் வாத்துகள், உள்ளான் வகை பறவைகள் திடீரென மயங்கி விழுந்து இறந்தன. இதையறிந்த உள்ளூர் மக்கள் அச்சமடைந்தனர்.
இது குறித்து, அப்பகுதி மீனவர்கள் கூறியதாவது:
பழவேற்காடு ஏரியில் பூநாரை உள்ளிட்ட பறவைகள் அதிகமாக காணப்படும். இங்கு, கடல் சார்ந்த பறவைகள் தான் வரும் என்ற கருத்து நிலவுகிறது. இந்நிலையில், வழக்கத்துக்கு மாறாக இங்கு தற்போது அரிய வகை வாத்துகள், உள்ளான்கள் காணப்படுவது வியப்பை ஏற்படுத்தியது. இவ்வாறு வந்த பறவைகள் திடீரென மயங்கி விழுந்து இறந்தது புதிராக உள்ளது.
கண்காணிப்பு
தகவல் அறிந்து அக்கம் பக்கத்து கிராம மக்கள், இறந்த வாத்துகள், உள்ளான்களை சாக்கு பைகளில் அள்ளிச் சென்றனர். ஒரு மூட்டையில், 150 முதல், 200 பறவைகள் என இதுவரை, 15 மூட்டைக்கு மேல் இறந்த பறவைகள் அள்ளிச் செல்லப்பட்டன.
இதன் அடிப்படையில், 3,000க்கும் மேற்பட்ட வாத்துகள், உள்ளான்கள் இறந்து இருக்கும் என்று தெரிகிறது.
இங்கு அண்ணாமலைச்சேரியை ஒட்டிய பகுதி மட்டுமல்லாது, இதற்கு எதிரில், 2 கி.மீ., தொலைவில் உள்ள மறு கரையிலும் வாத்துகள் இறந்து கிடப்பதாக தெரிய வந்துள்ளது. இதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.
நீரில் யூரியா போன்ற பொருட்கள் கலந்தால் தான் இது போன்ற இறப்புகள் ஏற்படும். இறந்த வாத்துகளின் இரைப்பையில் தங்கும் ரசாயனங்களை அப்புறப்படுத்தி விட்டு, மற்ற பாகங்களை இறைச்சிக்காக பயன்படுத்துகின்றனர்.
இதை செய்தது யார் என கண்டுபிடித்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமீப காலமாக வனத்துறையினரின் கண்காணிப்பு வெகுவாகக் குறைந்ததே இது போன்று நடக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- இ.பிரசாந்த்
சென்னை வட்ட வன உயிரின பாதுகாவலர்