"தி.மு.க.,வின் கருவியாக செயல்படவில்லை': பரஞ்ஜோதி 2வது மனைவி விளக்கம்
"தி.மு.க.,வின் கருவியாக செயல்படவில்லை': பரஞ்ஜோதி 2வது மனைவி விளக்கம்
ADDED : செப் 23, 2011 11:25 PM
சென்னை: '' தி.மு.க.,வின் கருவியாக நான் செயல்படவில்லை,'' என திருச்சி மேற்கு சட்டசபை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் பரஞ்ஜோதியின் இரண்டாவது மனைவி ராணி கூறியுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதம்: நானும், பரஞ்ஜோதியும் திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம்.
இது, திருச்சியில் உள்ள எல்லாருக்கும் தெரியும். என் வீட்டிற்கும், அவரது முதல் மனைவி வீட்டுக்கும் அரை கி.மீ., தூரம்தான் உள்ளது. திருமண போட்டோ, 2008 டிசம்பர் 6ம் தேதி பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளது. இன்றுவரை அவரது முதல் மனைவி எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. கடந்த சட்டசபைத் தேர்தலில், ஸ்ரீரங்கம் தொகுதி பொறுப்பாளராக பரஞ்ஜோதி நியமிக்கப்பட்ட பின், 'இனி உன்னிடம் நான் வரமாட்டேன். இந்த உறவை யாராவது அம்மாவிடம் சொன்னால், என் பதவிக்கு ஆபத்தாகிவிடும்' எனக் கூறி, என்னை விட்டு அவர் விலகிச் சென்றார். இது தொடர்பாக நான் பல முறை உங்களுக்கு மனு கொடுத்துள்ளேன். போலீஸ் அதிகாரிகள் விசாரித்து சென்றனர். நல்ல பதிலுக்காக காத்திருந்தேன். ஆனால், அதன் பின்னர் தான், அவர் திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் என்ற அறிவிப்பு வந்தது.
இந்த விஷயங்கள் முதல்வரின் கவனத்துக்கு வந்திருக்காது எனக் கருதி, பத்திரிகைகள் மூலமாக உங்கள் கவனத்துக்கு கொண்டு வரவே, பேட்டி கொடுத்தேன். 'தற்போது என்னிடம் உள்ள ஆவணங்கள் அனைத்தும் பொய், நான் தி.மு.க.,வின் கருவியாக செயல்படுகிறேன்' என, அவர் கூறுவது முற்றிலும் தவறு. டாக்டர் என்ற முறையில், பணி நிமித்தமாகவே அமைச்சர் நேருவை சந்திக்க நேர்ந்தது. முதல்வர் அழைத்தால், நேரில் வந்து எல்லா ஆதாரங்களையும் காண்பிக்க தயாராக உள்ளேன். இவ்வாறு கடிதத்தில் ராணி கூறியுள்ளார்.