வீட்டுக்குள் "மினி டாஸ்மாக்' கடை நடத்திய ஆயுதப்படை போலீஸ்காரரின் மனைவி கைது
வீட்டுக்குள் "மினி டாஸ்மாக்' கடை நடத்திய ஆயுதப்படை போலீஸ்காரரின் மனைவி கைது
ADDED : ஆக 17, 2011 01:02 AM
ஆத்தூர் : ஆத்தூர் அருகே, வீட்டுக்குள், 'மினி டாஸ்மாக்' கடை நடத்தி வந்த, சென்னை ஆயுதப்படை போலீஸ்காரரின் மனைவியை, ஆத்தூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கிழக்கு ராஜாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீராளன்,35. அவர், சென்னை மாநகர் ஆயுதப்படையில் போலீசாக பணி செய்து வருகிறார். சீராளனின் மனைவி ஜெகதாம்பாள்,25, வீட்டுக்குள்,'டாஸ்மாக்' சரக்கு பாட்டில்கள் பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளார். குடிமகன்களுக்கு, 'ஜில் பீர்' உள்ளிட்ட சரக்குகளையும் விற்று வந்தார்.'மினி டாஸ்மாக்' கடை போல் செயல்பட்டு வந்ததால், ஏராளமான குடிமகன்கள் குவிந்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள், மாவட்ட எஸ்.பி., மயில்வாகனனுக்கு புகார் செய்தனர். ஆத்தூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டி.எஸ்.பி., சந்திரசேகர், இன்ஸ்பெக்டர் வெள்ளச்சாமி, எஸ்.ஐ., அம்பிகா உள்ளிட்ட, 20 போலீசார், கிழக்கு ராஜபாளையத்தில் ஜெகதாம்பாள் வீட்டில், திடீர் சோதனை நடத்தினர். மினி டாஸ்மாக் கடை போல், வீட்டுக்குள் பிரிட்ஜ்களில் சரக்கு பாட்டில் வைத்து விற்பனை செய்வதைப் பார்த்த போலீசார் அதிர்ச்சிக்குள்ளாகினர். வீட்டினுள் பதுக்கி வைத்திருந்த, 47 பாக்ஸ்களில் இருந்த, 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, 440 பீர், பிராந்தி, ரம் உள்ளிட்ட சரக்கு பாட்டில்களை அதிரடியாக பறிமுதல் செய்தனர். ஜெகதாம்பாள் மீது வழக்கு பதிந்து, கைது செய்தனர். பின், ஆத்தூர் இரண்டாவது குற்றவியல் நடுவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

