'ரேபிஸ்' நோயால் 36 பேர் உயிரிழப்பு பாம்பு கடியால் 16,000 பேர் பாதிப்பு
'ரேபிஸ்' நோயால் 36 பேர் உயிரிழப்பு பாம்பு கடியால் 16,000 பேர் பாதிப்பு
ADDED : நவ 09, 2024 10:25 PM
சென்னை:தமிழகத்தில், 'ரேபிஸ்' நோயால், இந்தாண்டில், 36 பேர் உயிரிழந்துள்ளனர். நாய்க்கடியால் நான்கு லட்சம் பேரும், பாம்புகடியால், 16,000 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னையில், 1.70 லட்சம் உட்பட மாநிலம் முழுதும், 20 லட்சத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் இருக்கலாம் என, கணக்கிடப்பட்டுள்ளது. தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்க்கடியால், தினமும் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் ஜனவரி, 1 முதல் இதுவரை, 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுள்ளனர். அதில், 36 பேர் வெறி நாய்க்கடி என்ற, 'ரேபிஸ்' நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துஉள்ளனர்.
கடந்தாண்டு, 18 பேர் உயிரிழந்த நிலையில், இந்தாண்டு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேபோல, பாம்பு கடியால், 16,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது:
அனைத்து சுகாதார நிலையங்களிலும், விலங்குகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை கட்டுப்படுத்த, தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 24 மணி நேரமும் பாம்பு மற்றும் நாய்க்கடி மருந்துகள் கையிருப்பில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
குறைந்தபட்சம் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், பாம்புகடிக்கான 10 ஏ.எஸ்.வி., மருந்து குப்பிகள் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல, நாய்க்கடிக்கான, 20 ஏ.ஆர்.வி., மருந்து குப்பிகள் வைத்திருப்பதும் அவசியம். பாம்பு, நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு வருவோருக்கு, உடனடி சிகிச்சை அளிப்பதுடன், உரிய மருந்தை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.