4 பெண்களை மணந்த மோசடி கணவன்கலெக்டரிடம் மனைவி புகார்
4 பெண்களை மணந்த மோசடி கணவன்கலெக்டரிடம் மனைவி புகார்
ADDED : ஆக 23, 2011 04:41 AM
சேலம்:நான்கு பெண்களை மணந்து, ஏமாற்றிய,'கல்யாண மன்னன்' மீது, ஓமலூர் மகளிர் போலீஸ் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக, பாதிக்கப்பட்ட இளம்பெண், கலெக்டர் மகரபூஷணத்திடம் புகார் மனு அளித்தார்.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள முத்தம்பட்டி வீரியன்தண்டா பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகள் கீதா, 23. கர்நாடக மாநிலம் மைசூர், அசோகபுரத்தை சேர்ந்த கிருஷ்ணன் - ரத்தினம்மாள் தம்பதியரின் மகனான விஜயகுமாருக்கு, நான்கு ஆண்டுக்கு முன், கீதாவை திருமணம் செய்து வைத்தனர்.
மேட்டூர் கொளத்தூரை சேர்ந்த ராதிகா என்பவரை, முதல் திருமணம் செய்த விஜயகுமார், அவரை விட்டு பிரிந்து, அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் தாலி கட்டாமல், குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதை மறைத்து, இரண்டாவதாக கீதாவை திருமணம் செய்துள்ளார்.
மூன்று வயது கைக்குழந்தை ராபினுடன் கீதா, விஜயகுமாருடன் மைசூரில் குடும்பம் நடத்தி வந்தார். சில மாதங்களுக்கு முன், விஜயகுமார் அதே பகுதியை சேர்ந்த வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
பல பெண்களை திருமணம் செய்து கொள்வது குறித்து கீதா, விஜயகுமார் மற்றும் அவர் குடும்பத்தினரிடம் கேட்டார். '2 லட்சம் ரூபாய் வரதட்சணையாக வாங்கி வந்தால் மட்டுமே, குடும்பம் நடத்த முடியும்' என, விஜயகுமாரும் அவரது குடும்பத்தினரும் கீதாவை சரமாரியாக தாக்கி உள்ளனர்.
அதைப் பார்த்த குழந்தை ராபின் அழவே, வெறி அடங்காத விஜயகுமார், பெற்ற குழந்தை என்றும் பாராமல், சுவரில் அடித்தார். பலத்தகாயமடைந்த குழந்தையை கீதா, மருத்துவமனையில் சேர்த்தார்.
அடுத்தடுத்து பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த விஜயகுமார், தன்னை வரதட்சணை கேட்டு மிரட்டி, பெற்ற குழந்தையை கொலை செய்ய முயன்றது குறித்து, ஓமலூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் கீதா புகார் அளித்தார்.
புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டியதால், குழந்தையுடன் வந்த கீதா, கலெக்டர் மகரபூஷணத்தை சந்தித்து, மோசடி பேர் வழியான விஜயகுமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மனு அளித்தார்.