ADDED : மே 11, 2026 05:22 PM

கோவை: கோவை மாவட்டம் நெகமத்தில் லாரி - கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சேலத்தை சேர்ந்த நால்வர் உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தனபால், 37, மனைவி மேனகா -35, மகள் கனிஷ்கா - 17, மகன் சுர்ஜித் -12 மற்றும் மேனகாவின் அண்ணன் மகள் சினேகா - 23 ஆகிய, 5 நபர்களும் இன்று காரில் பொள்ளாச்சி - பல்லடம் ரோட்டில் நெகமம் நோக்கி சென்றனர். காரை தனபால் ஓட்டிச்சென்றார்.
எதிர் திசையில் பல்லடத்தில் இருந்து பொள்ளாச்சி நோக்கி கிருஷ்ணகிரியை சேர்ந்த சரவணன், 39 என்பவர் ஓட்டி வந்த மாட்டுத்தீவன பாரம் ஏற்றிய லாரி வந்தது. இரு வாகனங்களும் நெகமம் அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் காரில் வந்தவர்கள் உடல் நசுங்கினர்.
போலீசார் காயம் அடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காரில் வந்த தனபால், மேனகா, கனிஷ்கா, சினேகா ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த சுர்ஜித்தை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்
