கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் 4 புதிய குளம்; முழு வீச்சில் பணி தொடங்கியது
கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் 4 புதிய குளம்; முழு வீச்சில் பணி தொடங்கியது
ADDED : அக் 07, 2024 10:30 PM

சென்னை: சென்னை, கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில், புதிதாக 4 புதிய குளங்களை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
சென்னை, கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் நீர்நிலையுடன் கூடிய பூங்கா அமைப்பது குறித்து, அரசு செயலர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்குமாறு, தமிழக அரசின் தலைமை செயலருக்கு, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.
ஆக்கிரமிப்புகளால் வேளச்சேரி ஏரியின் பரப்பு பெருமளவு குறைந்திருப்பது குறித்தும், கழிவுநீர் கலப்பதாலும், குப்பைகள் கொட்டப்படுவதாலும் ஏரி மாசடைந்துள்ளது குறித்தும்,வேளச்சேரி ஏரி பாதுகாப்பு இயக்கத்தின் துணைத் தலைவர் குமரதாசன் என்பவர் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த தீர்ப்பாயம், 'வெள்ள பாதிப்பிலிருந்து வேளச்சேரியை பாதுகாக்க, கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் நீர்நிலையுடன் கூடிய பூங்கா அமைக்கலாம்' என, யோசனை தெரிவித்தது. இது தொடர்பாக தமிழக அரசின் கருத்தையும் கேட்டது.
மழை பெய்தால் வெள்ளத்தாலும், மழை பொய்த்தால் வறட்சியையும் எதிர்கொள்ளும் சென்னையில், பசுமை பூங்கா அமைப்பதை விட புதிய நீர்நிலைகளை உருவாக்குவதே சிறந்த முடிவாக இருக்கும் என தீர்ப்பாயம் தெரிவித்து இருந்தது.
இதனை தொடர்ந்து, தமிழக அரசின் தலைமை செயலர், சம்பந்தப்பட்ட அரசு துறைகளின் செயலர்களுடன் ஆலோசனை நடத்தி, கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் நீர்நிலை அமைக்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தி, முடிவெடுக்க வேண்டும் என அவகாசம் கேட்டிருந்தது. வரும் அக்டோபர் 14ல் வழக்கின் அடுத்த விசாரணை நடக்க உள்ளது.
சென்னை மாநகராட்சி நடவடிக்கை
இந்நிலையில், கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில், ஏற்கனவே 30 கோடி லிட்டர் மழை நீர் கொள்ளளவு கொண்ட 3 குளங்கள் இருக்கின்றன; சென்னை மக்களின் தேவை கருதி, 10 கோடி லிட்டர் மழை நீரை தேக்கி வைக்க கூடிய வகையில், 4 புதிய குளங்கள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

