தென்னை மரம் ஏறும் தொழிலாளி கொலை வழக்கறிஞர், மனைவி உட்பட 4 பேர் கைது
தென்னை மரம் ஏறும் தொழிலாளி கொலை வழக்கறிஞர், மனைவி உட்பட 4 பேர் கைது
ADDED : மார் 18, 2024 01:46 AM

உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் மனைவியுடன் கள்ளத் தொடர்பில் இருந்த தென்னை மரம் ஏறும் தொழிலாளி கணேசனை 46, கொலை செய்த வழக்கறிஞர் சுரேஷ் 42, மனைவி ஜமுனா 32, மாமனார் முருகன் 52, மாமியார் முருகேஸ்வரி 42, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
உத்தமபாளையம் தண்ணீர் தொட்டி தெருவைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி தீபா. இரு குழந்தைகள் உள்ளனர். ஆறு மாதங்களுக்கு முன் தீபா குழந்தைகளுடன் சென்னை சென்றார்.
கணேசன் புதுச்சேரிக்கு சென்று அங்கு ஒரு நர்சரியில் பணிபுரிந்தார். மூன்று நாட்களுக்கு முன் புதுச்சேரியில் இருந்து உத்தமபாளையம் வந்து தந்தை வீட்டில் தங்கியிருந்தார்.
நேற்று முன்தினம் காலை 8:00 மணியளவில் உ.அம்மாபட்டி ரோடு தாலுகா அலுவலகம் அருகே கழுத்தில் கயிற்றால் இறுக்கப்பட்ட அடையாளங்களுடன் இறந்து கிடந்தார். முதுகு, காலில் சிராய்ப்பு காயங்கள் இருந்தன.
இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விமலா உடலை கைப்பற்றி தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினார். முதலில்  சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கினர். காலேஜ் ரோடு, தண்ணீர் தொட்டி தெரு, பாறை மேட்டு தெருவிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
உ.அம்மாபட்டி பைபாஸ் ரோட்டில் நள்ளிரவு டூவீலரில் மூவர் அமர்ந்து செல்வது பதிவாகியிருந்தது. அதை ஆய்வு செய்த போது கணேசனை நடுவில் அமர வைத்து பின்புறம் வழக்கறிஞர் சுரேஷ் அமர்ந்தும் டூவீலரை சுரேஷ் மாமனார் முருகன் ஓட்டிச் செல்வது தெரிந்தது.
சுரேஷ், அவரது மனைவி ஜமுனா, முருகன், மாமியார் முருகேஸ்வரியை போலீசார் கைது செய்தனர்.
ஜமுனாவுடன் கணேசன் கள்ளத் தொடர்பில் இருந்துள்ளார். அவரை சந்திக்க சென்ற கணேசனை சுரேஷ் உள்ளிட்ட 4 பேரும் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

