40 சதவீதம் பேருக்கு 'குளூக்கோமா' இருப்பதே தெரியவில்லை: நாராயணசாமி
40 சதவீதம் பேருக்கு 'குளூக்கோமா' இருப்பதே தெரியவில்லை: நாராயணசாமி
ADDED : மார் 20, 2025 12:05 AM
சென்னை:“கண் அழுத்த பாதிப்பு இருப்பது தெரியாமலேயே, 40 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இருக்கின்றனர்,” என, தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணை வேந்தர் நாராயணசாமி கூறினார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
'குளூக்கோமா' என்ற கண் நீர் அழுத்த பிரச்னை பெரும்பாலும், 35 வயதுக்கு மேற்பட்டோருக்கு அதிகளவில் காணப்படுகிறது. அதேநேரம், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், கண்ணில் அடிபடுதல், ஒற்றை தலைவலி, குடும்ப உறுப்பினர்களுக்கு, 'குளூக்கோமா' போன்றவை இருந்தாலும், இந்நோய் தாக்கும் அபாயம் உள்ளது.
தற்போது, நடுத்தர இளைஞர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
விளக்கை சுற்றி ஒளிவட்டம் தெரிந்தாலோ, அடிக்கடி தலைவலி வந்தாலோ, அடிக்கடி கண்ணாடியை மாற்றும் நிலை ஏற்பட்டாலோ, கண்ணில் ஒருவகையான திரவம் வந்தாலோ, கட்டாயம் கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இது, குளூக்கோமா பாதிப்பின் அறிகுறிகளாக இருக்கலாம். இதன் தீவிரம், பார்வை நரம்பை பாதித்து, பார்வையிழப்பை ஏற்படுத்தும். இந்தியாவில், 40 சதவீதத்திற்கு மேற்பட்டோர், தங்களுக்கு குளூக்கோமா பாதிப்பு இருப்பதை அறியாமல் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.