செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 40 பேர் கட்சி பதவி பறிப்பு: பழனிசாமி அதிரடி
செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 40 பேர் கட்சி பதவி பறிப்பு: பழனிசாமி அதிரடி
ADDED : அக் 01, 2025 07:28 AM

சென்னை : அ.தி.மு.க.,வில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 40 பேரின் கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை:
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொருளாளர் கந்தவேல் முருகன், இணை செயலர் அனுராதா, எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட செயலர் செல்வம், இணைச் செயலர் சிவசுப்பிரமணியம், ஜெயலலிதா பேரவை மாவட்ட இணை செயலர் மவுதீஸ்வரன், எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாவட்ட இணைச்செயலர் பெரியசாமி.
மகளிரணி மாவட்ட இணைச்செயலர் கவுசல்யா தேவி, மாவட்ட துணை செயலர் தமிழ்ச்செல்வி, மாணவரணி மாவட்ட துணைத் தலைவர் ராயண்ணன், வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவர் முத்துசாமி, செயலர் பிரகாஷ் பாலாஜி, உட்பட 40 பேர் அவரவர் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 5ம் தேதி கோபிசெட்டிப்பாளையத்தில் பேட்டி அளித்த செங்கோட்டையன், 'அ.தி.மு.க.,வில் இருந்து வெளியே சென்றவர்களை இணைக்க, பொதுச்செயலர் பழனிசாமி 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், என் போன்ற மனநிலையில் இருப்போருடன் சேர்ந்து, கட்சி ஒருங்கிணைப்புக்கான பணிகளை முழு வேகத்தில் மேற்கொள்வேன்' என எச்சரிக்கை விடுத்தார்.
மறுநாளே ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலர், அமைப்பு செயலர் பொறுப்புகளில் இருந்து, செங்கோட்டையனை நீக்கி பழனிசாமி உத்தரவிட்டார்.
கடந்த மாதம் 8ம் தேதி டில்லி சென்ற செங்கோட்டையன், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். அடுத்த சில நாட்களில் டில்லி சென்ற பழனிசாமி, அமித் ஷாவை சந்தித்தார். அப்போது, 'அ.தி.மு.க., தலைமைக்கு எதிராக பேசுவோரை சந்தித்து, அவர்களை ஊக்கப்படுத்த வேண்டாம்; இது அ.தி.மு.க.,வின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது' என, கூறியதாக செய்தி வெளியானது. அதன் பிறகு, செங்கோட்டையன் அமைதியானார்.
இந்நிலையில், செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 40 பேரை, கட்சி பதவிகளிலிருந்து பழனிசாமி நீக்கியுள்ளார்.
இதிலிருந்து செங்கோட்டையனை ஏற்க பழனிசாமி தயாராக இல்லை என்பது தெளிவாகி உள்ளது. இதனால், அடுத்து என்ன செய்வது என்பது குறித்து ஆதரவாளர்களுடன், செங்கோட்டையன் ஆலோசித்து வருகிறார்.