'தமிழகத்தில் 50% அரசு பஸ்கள் இயக்க தகுதி இல்லாதவை'
'தமிழகத்தில் 50% அரசு பஸ்கள் இயக்க தகுதி இல்லாதவை'
ADDED : ஜூலை 18, 2025 10:24 PM
தர்மபுரி:“தமிழகத்தில், 50 சதவீத அரசு பஸ்கள் இயக்க தகுதியில்லாதவையாக உள்ளன,” என, சி.ஐ.டி.யு., மாநில தலைவர் சவுந்தரராஜன் கூறினார்.
சி.ஐ.டி.யு., அமைப்பின் 16வது மாநில மாநாடு ஆக., 5, 6, 7 என மூன்று நாட்கள் தர்மபுரியில் நடக்கவுள்ளது. மாநாடு தொடர்பான சிறப்பு பேரவை கூட்டம், தர்மபுரியில் நடந்தது.
இதில், பங்கேற்ற மாநில தலைவர் சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:
சமீபகாலமாக, போக்குவரத்து கழகத்தில் தனியார்மயமாக்கல் தீவிரமாக உள்ளது. தற்போதுள்ள அரசு எதிர்க்கட்சியாக இருந்த போது, தங்களின் கொள்கை என்று கூறியதை மாற்றி, தவறாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில், ஒப்பந்த தொழிலாளர் முறை புகுத்தப்படுகிறது.
தற்போது நிலவும் சுற்றுச்சூழலுக்கு, எலக்ட்ரிக் பஸ்கள் தேவை தான். ஆனால், புதிய பஸ்கள் அனைத்தும் தனியார் வசம் வழங்கப்பட்டு, நிர்வகிக்கப்படுவது தான் பிரச்னை.
சென்னையில் ஐந்து பணிமனைகள் இவ்வாறு தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இது, மிக மோசமான நடவடிக்கை. இதை கைவிட்டு, போக்குவரத்து கழகங்களே, பஸ்களின் நிர்வாகத்தை மேற்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட அரசு பஸ்கள், விதிப்படி இயக்க தகுதி இல்லாதவை. இதை, பணியாளர்கள் மிகுந்த சிரமத்துடன் இயக்கி வருகின்றனர். எனவே, இதைத்தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.