அன்னதானம் நடத்த விடாமல் தடுத்த 500 பேர் கைது: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
அன்னதானம் நடத்த விடாமல் தடுத்த 500 பேர் கைது: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
ADDED : நவ 04, 2025 02:06 AM

திண்டுக்கல்:  ஐகோர்ட்டில் அனுமதி பெற்று, கோவில் திருவிழாவிற்கான அன்னதானத்தை, அரசுக்கு சொந்தமான மைதானத்தில் நடத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய ஒரு தரப்பை சேர்ந்த, 500 பேர் தானாக முன்வந்து கைதாகினர். பின்னர், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டும், மறியலிலும் ஈடுபட்டு எதிர்ப்பை தெரிவித்தனர்.
திண்டுக்கல் மாவட் டம், என்.பஞ்சம்பட்டி மைதானத்தில் காளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, அன்னதானம் நடத்த, ஒரு தரப்பினர் மதுரை  உயர்நீதிமன்ற கிளையில் அனுமதி பெற்றனர்.
கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடந்த நிலையில், கிராம மைதானத்தை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, மற்றொரு தரப்பினர் திரு இருதய ஆண்டவர் சர்ச் வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் துவக்கினர்.
அவர்களிடம், தாசில்தார் தலைமையில் பேச்சு நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை. நேற்று முன்தினம் 3வது நாளாக போராட்டம் நடந்த நிலையில், நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு போராட்ட குழுவினர் சர்ச் வளாகத்திலிருந்து வெளியே வந்தனர். மைதானத்தில் இரும்பு தடுப்புகளுடன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய, தாங்களாகவே முன்வந்து கைதாவதாக போலீசாரிடம் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, திண்டுக்கல் அழைத்து செல்லப்பட்டனர். அதில், 119 ஆண்கள் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட நிலையில், மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இதையடுத்து, வழக்கமான பூஜைகளுடன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. குறிப்பிட்ட மைதானத்தில் போலீஸ் பாதுகாப்புடன் அன்னதானமும் நடந்தது.
இந்நிலையில், கைதானவர்கள் விடுவிக்கப்பட்ட பின், குறிப்பிட்ட மைதானத்தை பாஸ்கு மைதானமாக அறிவிக்க வேண்டும்.
இந்த கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில், தங்கள் ஆதார், ரேஷன் அட்டை உள்ளிட்டவற்றை ஒப்படைக்க போவதாக கூறி, கருப்புப்பட்டை அணிந்த படி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.
கலெக்டர் அலுவலக சர்வீஸ் ரோட்டில் மறியலிலும் ஈடுபட்டனர். கலெக்டர் சரவணன், எஸ்.பி., பிரதீப் அவர்களில் சிலரை அழைத்து பேசினர். அரசு தரப்பில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டதால், மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

