நகர்ப்புற வாரியத்தில் மனை பெற்ற 56,000 பேர் பத்திரத்துக்கு காத்திருப்பு
நகர்ப்புற வாரியத்தில் மனை பெற்ற 56,000 பேர் பத்திரத்துக்கு காத்திருப்பு
ADDED : டிச 08, 2025 02:25 AM

சென்னை: நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் மனை ஒதுக்கீடு பெற்றவர்களில், 56,000 பேர் விற்பனை பத்திரம் கிடைக்காமல் சிரமப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்காக, பல்வேறு வீட்டுவசதி திட்டங்களை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் செயல்படுத்தி வருகிறது. தமிழக அரசு மட்டுமல்லாது, மத்திய அரசும், சர்வதேச நிதி நிறுவனங்கள் உதவியுடன் இப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.
உலக வங்கி உதவி கடந்த, 1979ம் ஆண்டு சென்னையில், 257 குடிசை பகுதிகளை மேம்படுத்தும் வகையில், சென்னை நகர்ப்புற வளர்ச்சி திட்டம், உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்பட்டது.
அதேபோல, 1989ம் ஆண்டு தமிழகம் முழுதும் 489 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, தமிழக நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இத்திட்டங்களில் நிலங்கள் கண்டறியப்பட்டு, மக் களுக்கு மனைகளாக ஒதுக் கப்பட்டன. மனை ஒதுக்கீடு பெற்றோர் முழுமையாக தவணை செலுத்தியும் அவர்களுக்கு விற்பனை பத்திரம் வழங்கப்படவில்லை.
இரண்டு திட்டங்களிலும் மொத்த மனைகள் எண்ணிக்கை, 1.34 லட்சம். இதில், 93,000 மனைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன, மீதியுள்ள 40,000 மனைகள், 40 ஆண்டுகளுக்கும் மேலாக வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.
இதில் மனை பெற்றோர், முழுமையாக தவணை செலுத்தி முடித்தால் அவர்களுக்கு விற்பனை பத்திரம் வழங்க வேண்டும் என்ற ஒப்பந்த அடிப்படையில், ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
ஆனால், இத்திட்டங்களில் இதுவரை, 37,000 பேருக்கு மட்டுமே விற்பனை பத்திரங்கள் வழங்கப்பட்டு உள்ளன. மீதியுள்ள, 56,000 பேருக்கு, இன்னும் விற்பனை பத்திரம் வழங்கப்படவில்லை.
இதற்காக வாரிய அலுவலகத்துக்கு அலைந்து, ஒதுக்கீட்டாளர்கள் ஓய்ந்து போகும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில், இரண்டு திட்டங்களிலும் பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான நிலங்கள் பிற துறைகள் தொடர்பானவை. இவ்விஷயத்தில் உயர் அதிகாரிகள் குழு அமைத்து, பிற துறைகளிடம் இருந்து நிலம் பெறப்படுகிறது.
அதிகாரம் பறிப்பு சென்னையில் அந்தந்த பகுதிக்கான எஸ்டேட் அலுவலரும், பிற நகரங்களில் கோட்ட அலுவலரும், விற்பனை பத்திரம் வழங்கலாம் என்ற விதிமுறை இருந்தது.சில ஆண்டுகளுக்கு முன் இதில் மாற்றம் செய்யப்பட்டது. எஸ்டேட் அலுவலரின் அதிகாரம் பறிக்கப்பட்டது.
ஒவ்வொரு விற்பனை பத்திரமும், தலைமை அலுவலக நிர்வாக குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, உயர் அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கான பணிகள், தலைமை அலுவலகத்தில் நடக்கவில்லை.
தலைமை அலுவலக அதிகாரிகள், புதிய திட்டங்களுக்கான கட்டுமான பணிகள், டெண்டர் விஷயங்களிலேயே குறியாக உள்ளனர். அதனால், விற்பனை பத்திரத்துக்காக, 56,000 பேர் காத்திருப்பது தொடர்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

