ரூ.35 கோடி மடிக்கணினிகளுடன் துறைமுகத்தில் கன்டெய்னர் திருட்டு திருவள்ளூரில் சிக்கிய 6 பேர்
ரூ.35 கோடி மடிக்கணினிகளுடன் துறைமுகத்தில் கன்டெய்னர் திருட்டு திருவள்ளூரில் சிக்கிய 6 பேர்
ADDED : செப் 21, 2024 02:40 AM

சென்னை:சென்னை மயிலாப்பூரை தலைமையிடமாக கொண்டு சி.ஐ.டி.பி.எல்., எனும் 'சென்னை இன்டர்நேஷனல் டெர்மினல் பிரைவேட் லிமிடெட்' நிறுவனம் செயல்படுகிறது.
இந்நிறுவனம், சென்னை துறைமுக வளாகத்தில் இறக்குமதி செய்யப்படும் சரக்குகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு, கன்டெய்னர் லாரிகள் வாயிலாக அனுப்பும் பணிகளை செய்கிறது.
பெங்களூரு தனியார் நிறுவனம் சீனாவில் இருந்து 5207 'டெல் நோட்புக்' ரக மடிக்கணினிகளை செப்., 7ல் சென்னை துறைமுகத்தில் இறக்குமதி செய்துள்ளது.
மடிக்கணினிகள் அடங்கிய கன்டெய்னர் பெட்டி, சி.ஐ.டி.பி.எல்., நிறுவன பணிமனையில் வைக்கப்பட்டிருந்தது.
பெங்களூரு நிறுவனம், அந்த கன்டெய்னர் பெட்டியை எடுத்து வர, செப்., 11ல் 'டிரைலர்' லாரியை துறைமுகத்திற்கு அனுப்பியது. லாரி ஓட்டுனர், சம்பந்தப்பட்ட பணிமனைக்கு சென்று பார்த்தபோது, அந்த கன்டெய்னரை காணவில்லை. 35 கோடி ரூபாய் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்கள் அடங்கிய கன்டெய்னர் பெட்டி மாயமானதாக சி.ஐ.டி.பி.எல்., போலீசில் புகார் அளித்தது. போலீசார் 'கன்டெய்னர் டிராக்கிங் ரிப்போர்ட்' பட்டியலை ஆய்வு செய்தனர்.
இதில் போலி ஆவணங்கள் அளித்து கன்டெய்னர் பெட்டியை, வேறொரு டிரைலர் லாரியில் எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இதற்கு உடந்தையாக, சி.ஐ.டி.பி.எல்., நிறுவன ஊழியர் இளவரசன் செயல்பட்டதும் தெரிந்தது.
இவர், கன்டெய்னரை வெளியே எடுத்துச் செல்ல, 'டாக்குமென்டேஷன் கிளியரன்ஸ்' என்ற சான்றை போலியாக தயாரித்து கொடுத்ததும் தெரியவந்தது.
கன்டெய்னர் பெட்டி திருவள்ளூர், மணவாள நகரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை அறிந்த போலீசார் அங்கு சென்று, கன்டெய்னரை மீட்டனர்.
திருவள்ளூரைச் சேர்ந்த டிரைலர் லாரி உரிமையாளர் மணிகண்டன் 30, ஓட்டுனர் பால்ராஜ் 32, இடைத்தரகர்கள் திருவொற்றியூர் ராஜேஷ் 39, நெப்போலியன் 46, சிவபாலன் 45, திண்டுக்கல் முத்துராஜ் 46, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.