திருப்புவனம் காவல் நிலைய போலீசார் 6 பேர்... சஸ்பெண்ட்: விசாரணையில் வாலிபர் மரணம் எதிரொலி
திருப்புவனம் காவல் நிலைய போலீசார் 6 பேர்... சஸ்பெண்ட்: விசாரணையில் வாலிபர் மரணம் எதிரொலி
UPDATED : ஜூன் 30, 2025 01:06 AM
ADDED : ஜூன் 30, 2025 12:07 AM

திருப்புவனம்:சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் நகை திருட்டு வழக்கில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கோவில் தற்காலிக ஊழியர், மரணம் அடைந்த விவகாரத்தில், அவரை தாக்கியதாக போலீசார் ஆறு பேரை சஸ்பெண்ட் செய்து சிவகங்கை மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் உத்தரவிட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு ஜூன் 27ல், மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சிவகாமி, 76, என்பவர், தன் மகள் டாக்டர் நிகிதாவுடன் தரிசனம் செய்ய வந்தார். சிவகாமியால் நடக்க முடியாத நிலையில், கோவில் தற்காலிக ஊழியர் அஜித்குமார், 29, 'வீல் சேர்' கொண்டு வந்து கொடுத்துள்ளார்.
அப்போது, காரை பார்க்கிங் செய்யுமாறு சாவியை அஜித்குமாரிடம் நிகிதா கொடுத்துள்ளார். வழிபாடு முடிந்து சிவகாமியும், நிகிதாவும் காருக்கு திரும்பிய போது, கார் இருக்கையில் வைத்திருந்த பையில் 9.5 சவரன் நகையை காணவில்லை.
புகார் அளித்தனர்
இது குறித்து நிகிதா கேட்டதற்கு, அஜித்குமார் முறையான பதில் தராததால், திருப்புவனம் போலீசில் நகை திருட்டு குறித்து புகார் அளித்தார்.
போலீசார், அஜித்குமாரை கோவில் அருகே வைத்து விசாரித்தனர். விசாரணைக்கு பின், அஜித்குமார் உடல்நலம் பாதிக்கப்பட்டு, திருப்புவனம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இதையடுத்து, போலீசார் அடித்ததால் தான் அஜித்குமார் இறந்தார் எனக்கூறி, அவரது உறவினர்கள் திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷன் முன் நேற்று முன்தினம் இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவத்தையடுத்து, போலீஸ்காரர்கள் கண்ணன், ஆனந்த், பிரபு, சங்கரமணிகண்டன், ராஜா, ராமச்சந்திரன் ஆகிய ஆறு பேரை சஸ்பெண்ட் செய்து சிவகங்கை மாவட்ட எஸ்.பி., உத்தரவிட்டார். சம்பவம் தொடர்பாக திருப்புவனம் மாஜிஸ்திரேட் வெங்கடேஷ் பிரசாத் விசாரிக்கிறார்.
இதற்கிடையில், இறந்த அஜித்தின் சகோதரருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்; போலீசார் மீது வழக்கு பதிய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அவர்களிடம் எஸ்.பி., ஆஷிஷ் ராவத் பேச்சு நடத்தினார். அத்துடன் இச்சம்பவத்தை கண்டித்து, மடப்புரத்தில் நேற்று வியாபாரிகள் கடையடைப்பு போராட்டமும் நடத்தினர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.
இதற்கிடையில், உயிரிழந்த அஜித்குமாரின் உடலை பார்க்க, அவரது தாய் மற்றும் சகோதரரை, தி.மு.க., முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுப்பையாவின் காரில் அழைத்து செல்ல போலீசார் ஏற்பாடு செய்தனர்.
மறித்தனர்
ஆனால், 'தி.மு.க., வினர் வாகனத்தில் அழைத்து செல்லாமல், போலீஸ் வாகனத்தில் தான் அழைத்து செல்ல வேண்டும்' என அ.தி.மு.க.,வினர் வலியுறுத்தினர். அத்துடன், தி.மு.க.,வினர் வாகனத்தை, அ.தி.மு.க., மாவட்ட செயலர் செந்தில்நாதன் தலைமையில் அக்கட்சியினர் மறித்தனர். மேலும், போராட்டம் நடந்த இடத்தில் கம்யூ., நாம் தமிழர், பா.ஜ., உள்ளிட்ட கட்சியினரும் திரண்டனர்.
அரைமணி நேர போராட்டத்திற்கு பின், போலீஸ் வாகனத்தில் அவர்களை அழைத்து சென்றனர். போலீசாரும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் தி.மு.க.,வினரை வைத்தே பேச்சு நடத்தினர்.
இதற்கு, மற்ற கட்சியினரும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். பேச்சு நடந்த இடத்திற்கு, தாசில்தார் விஜயகுமாரை அனுமதிக்கவில்லை என புகார் தெரிவித்தனர்.
திருப்புவனத்தைச் சேர்ந்த கலாம் கார்த்திகேயன் கூறியதாவது:
விசாரணை என்ற பெயரில் அஜித்தை, போலீசார் சட்டவிரோதமாக வைத்து அடித்துள்ளனர். தவறு எதுவாக இருந்தாலும் தீர விசாரித்திருந்தால், இது போன்று உயிர் பலி ஏற்பட்டிருக்காது.
போலீசாரின் எந்த விசாரணையாக இருந்தாலும், அது மரணத்தில் தான் முடியும் என்பதை அஜித் மரணம் சுட்டிக்காட்டுகிறது. மரணிப்பது இயல்பு என்றாலும், மரணிக்க வைப்பது தான் போலீசாரின் செயல் என, இந்த சம்பவம் மூலம் நமக்கு தெரிய வந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.