எவரெஸ்ட் பேஸ் கேம்ப் சிகரம் அடைந்து சாதனை படைத்த 6 வயது தமிழக சிறுமி
எவரெஸ்ட் பேஸ் கேம்ப் சிகரம் அடைந்து சாதனை படைத்த 6 வயது தமிழக சிறுமி
UPDATED : மே 18, 2025 08:02 AM
ADDED : மே 18, 2025 02:55 AM

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் ராமையன்பட்டையைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் வெங்கடேஷ் 35. பெங்களூரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது மனைவி அபர்ணா 34. இவர்களது 6 வயது மகள் லலித் ரேணு. சங்கர்நகர் ஜெயேந்திரர் சுவாமிகள் மெட்ரிக் பள்ளியில் முதலாம் வகுப்பு பயில்கிறார். ஸ்ரீதருக்கு மலை ஏற்றத்தில் ஆர்வம் உள்ளதால் மனைவி மற்றும் குழந்தையையும் மலையேற்றத்திற்கு அழைத்து செல்வார்.
லலித் ரேணு கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தமிழகம், ஆந்திராவில் உள்ள 30க்கும் மேற்பட்ட பல்வேறு மலைச்சிகரங்களை ஏறியுள்ளார். எவரெஸ்ட் சிகரத்தில் ஏற லலித் ரேணு இந்தாண்டு பயிற்சி பெற்றார். அவரும் தந்தை தாயும் பயிற்சி எடுத்துக் கொண்டனர்.மே 5 ஸ்ரீதர், மனைவி அபர்ணா, மகள் லலித் ரேணு எவரெஸ்ட் சிகரத்தை நோக்கி நடை பயணம் துவக்கினர். மொத்தம் 130 கிலோ மீட்டர் சென்று திரும்ப திட்டமிட்டனர். மூன்று நாட்கள் மட்டுமே மலையில் நடந்த நிலையில் தாயார் அபர்ணாவுக்கு குளிர் ஒத்துக் கொள்ளாததால் அங்கேயே மலை கேம்பில் தங்கினார். ஸ்ரீதரும் லலித் ரேணுவும் தொடர்ந்து நடந்து மே 14ல் 18000 அடி உயரமுள்ள எவரெஸ்ட் பேஸ் கேம்பை அடைந்தனர்.
ஸ்ரீதர் கூறியதாவது: மலை உச்சி செல்ல செல்ல ஆக்சிஜன் குறைந்து மூக்கில் ரத்தம் வரத்துவங்கியது. நான் சிரமப்பட்டேன். மகள் ஆர்வமுடன் இருந்தார். தற்போது மகளுடன் சென்று வந்தது மகிழ்ச்சியை தருகிறது. தற்போது மலையிலிருந்து கீழே இறங்கி கொண்டிருக்கிறோம் என்றார்.
ஆறு வயதிற்குட்பட்ட சிறுமி என்ற அளவில் தமிழகத்தைச் சேர்ந்த லலித் ரேணு தான் முதல் முதலாக எவரெஸ்ட் பேஸ் கேம்பை அடைந்துள்ளார். அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
ஜூன் 5 அவர்கள் திருநெல்வேலி திரும்புகின்றனர்.