மருத்துவ பட்டதாரிகளில் 67 % பெண்கள் கவர்னரை புறக்கணித்த அமைச்சர், அரசு செயலர்
மருத்துவ பட்டதாரிகளில் 67 % பெண்கள் கவர்னரை புறக்கணித்த அமைச்சர், அரசு செயலர்
ADDED : அக் 25, 2024 12:57 AM

சென்னை:தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் 37வது பட்டமளிப்பு விழா, சென்னை கிண்டியில் உள்ள பல்கலை வளாகத்தில் நேற்று நடந்தது. கவர்னரும், பல்கலை வேந்தருமான ரவி, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
மருத்துவ துறையில், 5,371 பேர்; பல் மருத்துவம் - 1,485; ஆயுஷ் மருத்துவம் - 2,055; மருத்துவம் சார்ந்த துணை படிப்புகளில், 26,882 பேர் என, 35,793 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இவர்களில், 121 பேருக்கு கவர்னர் ரவி நேரடியாக வழங்கினார்.
142 பதக்கங்கள்
மேலும், 57 தங்கம், 18 வெள்ளி பதக்கங்கள், 27 அறக்கட்டளை சான்றிதழ்கள், 40 பேருக்கு பல்கலை பதக்கங்கள் என, 142 பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லுாரி மாணவர் ஸ்ரீராம் ஆனந்த், ஒன்பது பதக்கங்கள் பெற்றார்.
மருத்துவ படிப்புகளில் பட்டம் பெற்றவர்களில், 67 சதவீதம் பேர் பெண்கள். சண்டிகர் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் விவேக் லால் பட்டமளிப்பு உரை நிகழ்த்தினார்.
முன்னதாக, பட்டமளிப்பு விழா நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்த மருது சகோதரர்கள் புகைப்படத்திற்கு, கவர்னர் ரவி மலர்துாவி மரியாதை செலுத்தினார்.
கட்டுப்பாடு
கோவை பாரதியார் பல்கலை பட்டமளிப்பு விழாவில், கவர்னர் பங்கேற்ற போது, அப்பல்கலை ஆராய்ச்சி படிப்பு மாணவர், பல்கலை நிர்வாகம் மீது புகார் தெரிவித்து மனு அளித்தார்.
இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க, நேற்றைய விழாவில் பட்டம் பெற வந்த மாணவர்கள், தீவிர சோதனைக்கு பின் மேடை ஏற அனுமதிக்கப்பட்டனர்.