ADDED : அக் 21, 2024 04:19 AM

சென்னை: சென்னையில், 80 உட்பட, தமிழகம் முழுதும், 242 புதிய பஸ்கள் இயக்கத்துக்கு வந்து உள்ளன.
போக்குவரத்து கழக அறிக்கை: தமிழகத்தில், அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில், 2022 - 23 மற்றும் 2023 - -24ம் நிதியாண்டுகளில், 2,000 புதிய பஸ்கள் வாங்க திட்டமிடப்பட்டது. இதுவரை, 1,905 பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன.
சென்னையில், மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில், 228 தாழ்தள பஸ்கள் ஏற்கனவே இயக்கப்பட்டன. தற்போது மேலும், 41 தாழ்தள பஸ்கள் வாங்கப்பட்டு, 269 தாழ்தள பஸ்கள் இயக்கத்தில் உள்ளன.
நடப்பாண்டு 3,000 புதிய பஸ்கள் வாங்க திட்டமிடப்பட்டு, ஏற்கனவே, 162 புதிய, 'பி.எஸ்., 6' வகை சாதாரண பஸ்கள் வாங்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு, 80 புதிய பி.எஸ்., -6 வகை வாகனங்கள் வாங்கப்பட்டு நேற்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. தற்போது மாநிலம் முழுதும், 242 சாதாரண, பி.எஸ்., 6 வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
இப்புதிய பஸ்கள், இலவச மகளிர் பயண திட்டத்தின் கீழ் இயக்கப்படுவதால், மகளிர் மட்டுமின்றி, மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர் உள்ளிட்டோரும் இலவசமாக பயணிக்கலாம் என, அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.