அமரன் படத்தில் வந்த மொபைல் எண்; ரூ.1.10 கோடி இழப்பீடு கோரி வழக்கு
அமரன் படத்தில் வந்த மொபைல் எண்; ரூ.1.10 கோடி இழப்பீடு கோரி வழக்கு
ADDED : டிச 05, 2024 04:34 AM

சென்னை : அமரன் படத்தில், தனது மொபைல் எண்ணை பயன்படுத்தியதால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு, 1.10 கோடி ரூபாய் இழப்பீடு அளிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், பொறியியல் மாணவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை, ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த, பொறியியல் மாணவர் வாகீசன் தாக்கல் செய்த மனு:
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், அமரன் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்தது. இந்தப் படத்தில், கதாநாயகியான சாய்பல்லவியின் மொபைல் எண் காட்டப்பட்டது. அந்த எண், என் பயன்பாட்டில் உள்ளது.
திரைப்படத்தில் என் மொபைல் எண் வந்ததால், பல மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும், அதற்கு அழைப்புகள் வந்தன. ஆயிரக்கணக்கான அழைப்புகளால், என்னால் நிம்மதியாக துாங்க முடியவில்லை. படிக்க முடியவில்லை.
எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு தயாரிப்பாளரும், இயக்குநரும் தான் காரணம் என்பதை குறிப்பிடத் தேவையில்லை. அவர்களின் கவனத்துக்கு இந்தப் பிரச்னையை எடுத்துச் சென்றும், அவர்கள், தவறை திருத்தவில்லை.
இழப்பீடு கோரி நோட்டீஸ் அனுப்பிய பின்னும், அழைப்புகள் தொடர்ந்து வருகின்றன. எனவே, 1.10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கும்படி, ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்கும், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கும் உத்தரவிட வேண்டும்.
இந்தப் படத்தை ஓ.டி.டி., தளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும். என் மொபைல் எண்ணுக்கு வந்த அழைப்புகளின் விபரங்களை வழங்க, ஏர்டெல் நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.