'தினமலர்' நடத்தும் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி சென்னையில் வரும் 14-ல் நடக்கிறது
'தினமலர்' நடத்தும் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி சென்னையில் வரும் 14-ல் நடக்கிறது
ADDED : ஜூன் 08, 2025 05:56 AM

சென்னை: அண்ணா பல்கலை பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பித்த, பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்காக, 'தினமலர்' நடத்தும் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி, வரும், 14ம் தேதி, சென்னையில் நடக்கிறது.
தமிழக அரசு சார்பில், தொழில்நுட்ப கல்வி இயக்ககம், 'ஆன்லைன்' வாயிலாக, டி.என்.இ.ஏ., என்ற, தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கையை, ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது. பி.இ.-, - பி.டெக்., படிக்க விரும்பும் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில், 'தினமலர்' நாளிதழ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியுடன் இணைந்து, 'இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி' நிகழ்ச்சியை நடத்துகிறது. தமிழகமெங்கும் நடக்கவுள்ள இந்நிகழ்ச்சி, சென்னையில் வரும், 14ம் தேதி துவங்குகிறது.
அண்ணா பல்கலை கல்லுாரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லுாரிகள் போன்றவற்றில் உள்ள இளநிலை பட்டப்படிப்புகளுக்கான இடங்கள் மற்றும் தனியார் பொறியியல் கல்லுாரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் போன்றவை, 'ஆன்லைன்' வாயிலாக நடக்கும் இந்த கலந்தாய்வு வாயிலாக நிரப்பப்படுகின்றன.
l இந்த ஆண்டு உங்கள் 'கட் ஆப்' மதிப்பெண்ணிற்கு எந்த கல்லுாரி கிடைக்க வாய்ப்பு
l நவீன தொழில்நுட்ப படிப்புகளில் உள்ள வாய்ப்புகள்
l 'கோர்' இன்ஜினியரிங் துறைகளின் எதிர்காலம்
l சிறப்பு இடஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடைமுறைகள்
l ஆன்லைன் கலந்தாய்வு அணுகுமுறைகள்
l மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்
l கல்லுாரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்யும் விதம்
l வேலை வாய்ப்பு மிகுந்த படிப்புகள்
இவை உட்பட மாணவர்களது பல்வேறு சந்தேகங்களுக்கும், இந்நிகழ்ச்சியில் கல்வி ஆலோசகர் ஆர்.அஸ்வின் இலவசமாக ஆலோசனை வழங்குகிறார். வரும், 14ம் தேதி, சென்னை தி.நகர் வாணி மஹாலில், காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரையிலும், குன்றத்துாரில் உள்ள சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவன வளாகத்தில், மாலை 3:00 முதல், 6:00 மணி வரையிலும் நடக்கிறது.
இந்நிகழ்ச்சிகளில், ஆன்லைன் கவுன்சிலிங் நுணுக்கங்கள்; சரியாக, 'சாய்ஸ் பில்லிங்' பதிவிடுவதற்கான வழிமுறை; 'புரொவிசனல் அலாட்மென்ட்' பெறுதல்; கவுன்சிலிங் முறையில் இந்தாண்டு கொண்டு வரப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் உட்பட ஏராளமான தகவல்களை, மாணவர்களுக்கு, டி.என்.இ.ஏ., - 2025 செயலர் டாக்டர் டி.புருஷோத்தமன் நேரடியாக வழங்குகிறார்.
சென்னையை தொடர்ந்து, தமிழகம் முழுதும் பல்வேறு பகுதிகளில் இந்நிகழ்ச்சி நடக்கவுள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு அனுமதி இலவசம்.