வெளிநாட்டினரை கவர்ந்த புவிசார் குறியீடு பொருட்கள் அரங்கு
வெளிநாட்டினரை கவர்ந்த புவிசார் குறியீடு பொருட்கள் அரங்கு
ADDED : ஜன 08, 2024 06:02 AM
உலக முதலீட்டாளர் மாநாடு நடக்கும், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய அரங்கின் தரை தளத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, தொழில் துறை, தமிழகத்தில் தொழில் துவங்க சாதகமான சூழலை விளக்கும், கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், தமிழகத்தில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் இடம்பெற்ற அரங்கு இருந்தது. அதில், காஞ்சிபுரம் பட்டு, பழனி பஞ்சாமிர்தம், ஈரோடு மஞ்சள், ஆத்துார் வெற்றிலை, ஸ்ரீவில்லிபுத்துார் பால்கோவா, கோவில்பட்டி கடலை மிட்டாய், கொடைக்கானல் மலை பூண்டு உட்பட புவிசார் குறியீடு பெற்ற, 58 பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன
பார்வையாளர்களுக்கு, கடலை மிட்டாய் சாப்பிட வழங்கப்பட்டது. அரங்கை பார்வையிட்ட வெளிநாட்டவர்கள், கடலை மிட்டாயை ருசி பார்த்ததுடன், ஒவ்வொரு பொருளின் தயாரிப்பு குறித்து, ஊழியர்களிடம் ஆர்வமுடன் கேட்டறிந்தனர்
இதுதவிர, 'ஸ்டார்ப் அப்' எனப்படும், புத்தொழில் நிறுவனங்கள் தயாரித்துள்ள மின்சார இரு சக்கர வாகனம், சாக்லேட் உட்பட பல்வேறு தயாரிப்பு நிறுவனங்களின் கண்காட்சி அரங்குகள் இடம் பெற்றிருந்தன
தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம் சார்பில், டிஜிட்டல் அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. அதில், காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில் அமைய உள்ள புதிய விமான நிலையத்தின் மாதிரி காட்சிப்படுத்தப்பட்டது
மின் வாரியம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்கில் காற்றாலை, சூரியசக்தி, கடல் காற்றாலை, நீரேற்று மின் நிலையம் ஆகியவற்றின் மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன
சிங்கப்பூர், அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், தென் கொரியா, டென்மார்க் ஆகிய ஒன்பது நாடுகளின் அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு நாட்டின் அரங்கிலும், அந்நாட்டின் முன்னணி நிறுவனங்களின் அரங்குகள் இடம் பெற்றிருந்தன.