எவருக்கும் வரக்கூடாத துயரம்; தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்துவிட்டு தேர்வெழுதிய 10ம் வகுப்பு மாணவன்
எவருக்கும் வரக்கூடாத துயரம்; தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்துவிட்டு தேர்வெழுதிய 10ம் வகுப்பு மாணவன்
ADDED : மார் 16, 2026 01:13 PM

நமது நிருபர்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வேட்டையன்பட்டியில் தந்தை உடலுக்கு இறுதிச் சடங்கு செய்துவிட்டு, 10ம் வகுப்பு படிக்கும் மாணவர் அரசு தேர்வு எழுத சென்றது அனைவரையும் கண்கலங்க வைத்தது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வேட்டையன்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன்,45,. இவர் புரோட்டோ மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்றிரவு உயிரிழந்தார்.
இவரது மகன் இளமாறன் 15, சிங்கம்புணரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் நிலையில், தற்போது நடைபெற்று வரும் அரசு பொதுத்தேர்வு எழுதி வருகிறார். தந்தை இறப்பால், இளமாறன் சோகம் அடைந்தார். இந்த துயரமான சூழலில், இன்று (மார்ச் 16) காலை சிங்கம்புணரி மயானத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்ட தந்தை சரவணனின் உடலுக்கு இளமாறன் இறுதி சடங்குகள் செய்தார்.
பிறகு இன்று நடந்த ஆங்கில பாட தேர்வு எழுத இளமாறன் சென்றார். இந்நிகழ்வு அனைவரையும் கண்கலங்க வைத்தது. இந்த சம்பவம் துயரமான சம்பவம் எவருக்கும் நிகழக்கூடாது. இளமாறனுக்கு நிகழ்ந்த சோதனை மிகுந்த வருத்தம் அளிக்கிறது என உறவினர்கள் தெரிவித்தனர்.

