மிகப்பெரிய பெருமைக்குரிய விஷயம்; எத்தியோப்பியாவின் உயரிய விருது பெற்ற மோடி மகிழ்ச்சி
மிகப்பெரிய பெருமைக்குரிய விஷயம்; எத்தியோப்பியாவின் உயரிய விருது பெற்ற மோடி மகிழ்ச்சி
UPDATED : டிச 17, 2025 07:18 AM
ADDED : டிச 17, 2025 06:50 AM

நமது சிறப்பு நிருபர்
எத்தியோப்பியாவின் உயரிய விருது பெற்றது மிகப்பெரிய பெருமைக்குரிய விஷயம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜோர்டான் நாட்டு பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு, எத்தியோப்பியாவுக்கு பிரதமர் மோடி சென்றார். அடிஸ் அபாபா விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு பிரதமர் அபய் அகமது அலி நேரில் வந்து பிரதமர் மோடியை வரவேற்று காரில் ஹோட்டலுக்கு அழைத்து சென்றார்.
பின்னர் பிரதமர் மோடியும், எத்தியோப்பியா பிரதமர் அபய் அகமது அலியும் பேச்சு நடத்தினர்.
பொருளாதாரம், தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர். பின்னர், பிரதமர் மோடிக்கு எதியோப்பியான் தி கிரேட் ஹானர் என்ற உயரிய விருது வழங்கி அந்நாட்டு பிரதமர் அபய் அகமது அலி கவுரவித்தார். இந்த விருது பெறும் முதல் உலக தலைவர் மோடியே ஆவார்.
பிறகு பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டின் மிக உயரிய விருதான - எத்தியோப்பியாவின் தி கிரேட் ஹானர் விருது எனக்கு வழங்கப்பட்டுள்ளது. உலகின் மிகவும் பழமையான நாகரிகத்தால் கவுரவிக்கப்படுவது எனக்கு மிகுந்த பெருமை அளிக்கிறது. அனைத்து இந்தியர்களின் சார்பாக, இந்த கவுரவத்தை நான் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்.
இது மிகப்பெரிய பெருமைக்குரிய விஷயம். உங்கள் அனைவருடனும், இந்த மாபெரும் எத்தியோப்பியா நாட்டில் இருப்பது எனக்கு ஒரு பெரிய அதிர்ஷ்டம். நான் எத்தியோப்பியாவுக்கு வந்தவுடன், இங்குள்ள மக்கள் எனக்கு அன்பையும், பாசத்தையும் வழங்கினர். பிரதமர் என்னை விமான நிலையத்தில் வரவேற்க வந்ததில் மிகவும் மகிழ்ச்சி. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
140 கோடி இந்தியர்களுக்கு….!
எத்தியோப்பியாவின் கவுரவ விருதைப் பெற்றதில் பெருமை கொள்கிறேன். அதை 140 கோடி இந்திய மக்களுக்கும் அர்ப்பணிக்கிறேன் என்று பிரதமர் மோடி சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

