அரிவாளால் தாக்க முயன்ற ரவுடி: காலில் சுட்டுப்பிடித்த போலீஸ்
அரிவாளால் தாக்க முயன்ற ரவுடி: காலில் சுட்டுப்பிடித்த போலீஸ்
ADDED : செப் 23, 2024 06:57 PM

திருச்சி: திருச்சியில் அரிவாளால் தாக்க முயன்ற ரவுடியை, காலில் சுட்டு போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர் ஆட்டுக்குட்டி சுரேஷ், 40. பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவர், நேற்று மாலை வீட்டுக்கு அருகே, நண்பர்களுடன் மது அருந்தினார். அப்போது, அங்கு வந்த மர்ம கும்பல், சுரேசை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொன்றது.
கடந்த ஆண்டு, அதே பகுதியைச் சேர்ந்த தலைவெட்டி சந்துரு கொலை செய்யப்பட்டார். அதில் தொடர்புடைய சுரேஷை பழிக்கு பழியாக கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஸ்ரீரங்கம் போலீசார், கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் ஜம்பு என்ற ஜம்புகேஸ்வரன் என்ற ரவுடிக்கு தொடர்பு உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவரை தேடி வந்தனர். ஸ்ரீரங்கம் - மேலூர் சாலையில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவில் அவர் பதுங்கி இருந்தது போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த போலீசார், ரவுடியை பிடிக்க முயன்றனர். அப்போது போலீசாரை அரிவாளால் தாக்க முயற்சி செய்த ரவுடியை, சப் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் காலில் சுட்டு பிடித்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.