கள்ளச்சாராய வழக்கில் கைதானவர்களிடம் ஒரு நபர் ஆணைய தலைவர் விசாரணை
கள்ளச்சாராய வழக்கில் கைதானவர்களிடம் ஒரு நபர் ஆணைய தலைவர் விசாரணை
ADDED : அக் 15, 2024 06:08 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய பலி வழக்கில் கைதான 8 பேரிடம் ஒரு நபர் ஆணைய தலைவர் நேற்று விசாரணை மேற்கொண்டார்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம், சேஷசமுத்திரம், மாதவச்சேரி பகுதிகளில் கடந்த ஜூன் 19ம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்த 229 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதில் 68 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
இவ்வழக்கில், மெத்தனால் சப்ளை செய்தவர்கள், கள்ளச்ச சாராயம் விற்றவர்கள் என 24 பேரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.
கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், போலீசார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் என தனி, தனியாக விசாரணை நடந்தது.
இந்நிலையில், கள்ளச்சாராய வழக்கில் கைதாகி சிறையில் உள்ளவர்களிடம் விசாரணை நேற்று தொடங்கியது.
இதற்காக வேலுார் பெண்கள் சிறையில் இருந்து விஜயா, கடலுார் மத்திய சிறையில் இருந்து கண்ணுகுட்டி (எ) கோவிந்தராஜ், தாமோதரன், ஜோசப், மாதேஷ், ஷாகுல்ஹமீது, கண்ணன், சின்னதுரை ஆகிய 8 பேர் கள்ளக்குறிச்சிக்கு நேற்று அழைத்து வரப்பட்டனர்.
இவர்களிடம், ஒரு நபர் ஆணைய தலைவர் கோகுல்தாஸ் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார்.
அப்போது, எத்தனை ஆண்டுகளாக சாராயம் விற்பனை செய்கிறீர்கள், அதில், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மெத்தனாலை கலந்திருப்பது தெரியுமா. அல்லது நீங்கள் கலந்தீர்களா என்பது உட்பட பல்வேறு கேள்விகள் குறித்து கேட்டுள்ளார்.
விசாரணைக்காக வந்த 8 பேரும் குண்டர் சட்டத்தில் கைதானவர்கள் என்பது குறிப்பிடதக்கது. தொடர்ந்து இன்றும், நாளையும் 8 பேரிடமும் மீண்டும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.