ADDED : செப் 29, 2024 07:27 AM

'ஓடி விளையாடு பாப்பா...-நீ ஓய்ந்திருக்க லாகாகது பாப்பா' என்ற பாரதியின் வரிகளுக்கு ஏற்ப, நாம் சுறுசுறுப்பாக இருந்தால், நம் இதயமும் ஆரோக்கியமாக இருக்கும். இதய நலன் காக்க, உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின்படி, ஒவ்வொரு ஆண்டும் செப்.29ல் உலக இதய தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்தியா முன்னேற்ற பாதையில் பயணிக்கும் நிலையில், 1947ல் 32 வயதாக இருந்த நமது ஆயுட்காலம் சராசரி, 2024ல் 72ஆக உயர்ந்துள்ளது. ஆயுட்காலம் அதிகரித்ததால், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தற்போது தொற்று நோயை விட, மற்ற நோய்களால் தான் அதிகம் பேர் மரணம் அடைகின்றனர். இதில் பெரும்பாலான மரணங்கள் இதய ரத்தக் குழாய் அடைப்பு, தமனி பாதிப்பு போன்ற காரணங்களால் ஏற்படுகின்றன.
மாரடைப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவே, உலக இதய தினம் கடை பிடிக்கப்படுகிறது. நகரமயமாக்கல், உடல் பருமன், ஒரு இடத்தில் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்தல், பணி தொடர்பான மன அழுத்தம், உடற்பயிற்சியின்மை போன்ற மந்தமான வாழ்க்கை முறையே மாரடைப்பு ஆபத்தை அதிகரிக்கின்றன.
இதயப் பிரச்னையை சரி செய்ய, பைபாஸ் அறுவை சிகிச்சை, ஸ்டென்ட் பொருத்துதல் போன்ற சிகிச்சை முறைகள் உள்ளன, இதன் மூலம் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தலாம். 60 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளின் ஆயுட்காலத்தை அதிகரிக்கச் செய்யலாம்.
'துடிப்பாக இயங்க இதயம்' என்பதே இந்த ஆண்டு உலக இதய தினத்தின் மையக்கருத்து. இதன்படி நாம் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். நகர்ப்புற வாழ்க்கை முறையில் நாம் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பதில்லை. போக்குவரத்துக்கு வாகனம், 'லிப்ட்' பயன்படுத்தவது, தொலைபேசி, இணைய தளம் வாயிலாக பெரும்பாலான பணியை மேற்கொள்வது, நீண்ட நேரம் வேலை செய்வதால், உடற்பயிற்சிக்கு நேரம் கிடைப்பதில்லை.
அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது, புகைபிடித்தல், அலைபேசிக்கு அடிமையாவது என உடல் உழைப்பு இல்லாமல் வாழ்கிறோம். இதிலிருந்து மீண்டு உரிய உடற்பயிற்சி, நடைபயிற்சி, போதிய துாக்கம், மன அழுத்தம் இல்லாமல் இருந்தால், நம் இதயத்தை பாதுகாத்து நலமாக வாழலாம்.
- -டாக்டர் ஸ்ரீதர்
மூத்த இதய அறுவை சிகிச்சை நிபுணர்
அப்பல்லோ மருத்துவமனை, மதுரை