ADDED : டிச 15, 2024 06:54 PM

ஐயப்பன் தன் மனைவியரான பூர்ணா, புஷ்கலாவுடன் உள்ள கோயில் பற்றிய தகவல்கள் இங்கு இடம் பெற்றுள்ளது.
கல்வி வளர்ச்சிக்கு...
திருநெல்வேலி அருகே மேலப்பாட்டம் கிராமத்தில் மலை மீது உள்ளது ஆயிரங்காவு ஐயன் சாஸ்தா கோயில். பல கோயில்களில் பூரணை, புஷ்கலையுடன் அருள்பாலித்தாலும் இங்கு வித்தியாசமாக வீணையை கையில் ஏந்தியபடி இருக்கிறார். கல்விக்கடவுளான சரஸ்வதியின் வீணையை சாஸ்தா வைத்துள்ளதால் இவரை 'ஞான சாஸ்தா' என அழைக்கின்றனர். இவரை வணங்கினால் கல்வி வளர்ச்சி உண்டாகும். சபரிமலை போல இக்கோயிலும் மலை மீது உள்ளது. மேலப்பாட்டம் கிராமத்தில் இருந்து மலை ஏறிச்சென்றால் கோயிலை அடையலாம். சாஸ்தா சன்னதிக்கு செல்ல 18 படிகள் ஏறி செல்ல வேண்டும்.
பிரதானமான பூரணை, புஷ்கலையுடன் சாஸ்தாவும், சுற்று தெய்வங்களாக விநாயகர், சங்கிலி பூதத்தார், பலவேசக்காரன், பேச்சியம்மாள், இசக்கியம்மாள், சுடலைமாட சுவாமி, தளவாய் மாடன், லாட சன்னியாசி, விஷ்ணு துர்கை, வெள்ளச்சியம்மன் சன்னதிகள் உள்ளன. பங்குனி உத்திரத்தன்று திருவிழா நடக்கிறது.
திருநெல்வேலியில் இருந்து 16 கி.மீ.,
நேரம்: காலை 10:00 - மதியம் 3:00 மணி
தொடர்புக்கு: 70121 25309, 80563 04877
அருகிலுள்ள தலம்: திருநெல்வேலி நெல்லையப்பர் 13 கி.மீ.,
நேரம்: அதிகாலை 5:30 - 12:30 மணி மாலை 4:00 - 9:00 மணி
தொடர்புக்கு: 0462 - 233 9910

