நஞ்சை நிலத்தை மனையாக மாற்ற விரைவில் ஒற்றை சாளர முறை
நஞ்சை நிலத்தை மனையாக மாற்ற விரைவில் ஒற்றை சாளர முறை
ADDED : ஜூன் 12, 2023 05:42 AM
பயன்பாட்டில் இல்லாத நஞ்சை நிலங்களை, வீட்டு மனைகளாக மாற்றும் திட்டத்திற்கு, ஒற்றை சாளர முறையில் ஒப்புதல் வழங்குவதற்கான சாத்தியக் கூறுகளை, வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை ஆராய்ந்து வருகிறது.
தமிழகத்தில், விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றுவது தொடர்பான வழக்கில், 2016ல் சென்னை உயர் நீதிமன்றம் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தது.
இதன் அடிப்படையில், விவசாய நிலங்களை வகைப்பாடு மாற்ற, தமிழக அரசு, 2017ல் புதிய கட்டுப்பாடுகளை பிறப்பித்தது.
இந்தக் கட்டுப்பாடுகள், பயன்பாட்டில் இருக்கும் விவசாய நிலங்களை, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வீட்டுமனைகளாக மாற்றுவதை தடுக்க உதவும் என்று கூறப்பட்டது.
ஆனால், பயன்பாட்டில் இல்லாத விவசாய நிலங்களை, வேறு தேவைகளுக்கு மாற்ற, இந்த விதிகளே முட்டுக்கட்டையாக உள்ளன. இதுதொடர்பாக, தமிழக மனைப்பிரிவு மேம்பாட்டாளர்கள் சங்கம், அரசுக்கு அனுப்பிய கடிதம்:
தமிழகத்தில், விவசாயம் நடக்காத நிலங்கள், வருவாய் துறை ஆவணங்களில், 'நஞ்சை' என்ற வகைபாட்டில் தொடர்கின்றன.
இதனால், இந்த நிலங்களில் மனைப்பிரிவு திட்டங்கள், தொழிலக திட்டங்களை செயல்படுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. குறிப்பாக, பல்வேறு துறைகளிடம் தடையின்மை சான்று பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது.
எனவே, பயன்பாட்டில் இல்லாத நஞ்சை நிலங்களை, வீட்டு மனைகளாக மாற்றும் திட்டங்களுக்கு, ஒற்றை சாளர முறையில் ஒப்புதல் வழங்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளனர்.
இதுகுறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழக மனைப்பிரிவு மேம்பாட்டாளர்களின் கோரிக்கை அடிப்படையில், ஒற்றை சாளர முறையை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருகிறோம்.
இது தொடர்பாக, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., - நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., அதிகாரிகளிடம் கருத்து கேட்கப்பட்டு உள்ளது. இவர்கள் அளிக்கும் விபரங்களின் அடிப்படையில், இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.
- நமது நிருபர் -
