ADDED : ஜன 11, 2025 09:34 PM
சென்னை:''மத்திய அரசு, ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை செயலாக்குவதற்கான நெறிமுறைகளை வெளியிட்ட பின், தமிழகத்தில் தக்கதொரு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்,'' என, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
தி.மு.க., - எழிலரசன்: மத்திய அரசு ஊழியர்கள் பணி காலத்தில் பெறும் ஊதியத்தின் அடிப்படையில், 50 சதவீத ஓய்வூதியத்தை கணக்கெடுக்கலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. அதை தமிழக அரசும் நிறைவேற்ற முன்வருமா?
அமைச்சர் தங்கம் தென்னரசு: பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், தேசிய ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றிற்கு மாற்றாக, ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.
இதை செயலாக்குவதற்கான நெறிமுறைகள் வெளியிடப்படவில்லை. அது வெளியானவுடன், தமிழகத்தில் தக்கதொரு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வழி ஏற்படுத்தப்படும். முதல்வருடன் கலந்தாலோசித்து குழு அமைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.