எஸ்.ஐ.,க்கு ஆயுள் தண்டனை ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு
எஸ்.ஐ.,க்கு ஆயுள் தண்டனை ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : மார் 19, 2024 11:09 PM
மதுரை : ராமநாதபுரம் எஸ்.பி.பட்டினம் போலீஸ் ஸ்டேஷனில் விசாரணைக்கு வந்த இளைஞரை தற்காப்பிற்காக சுட்டுக்கொன்ற வழக்கில் எஸ்.ஐ.,காளிதாசுக்கு கீழமை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்தது.
எஸ்.பி.,பட்டினத்தில் உள்ள ஒரு ஒர்க் ஷாப்பில்  2014 அக்.,14ல் அதே பகுதியை சேர்ந்த முகமது சாலிகு என்பவர், தனது டூவீலரை பழுது பார்க்க விட்டிருந்தார். அந்த டூவீலரை தருமாறு எஸ்.பி.பட்டினத்தை சேர்ந்த செய்யது முகமது 24, தகராறு செய்தார். போலீசார் அவரை ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரித்த எஸ்.ஐ.,காளிதாஸ் 'லாக்கப்'பில் வைத்து ரிவால்வாரால் சுட்டதில் செய்யது முகமது இறந்தார். வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. எஸ்.ஐ.,காளிதாஸ் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு ராமநாதபுரம் நீதிமன்றம் ஆயுள் தண்டனை, ரூ.2 லட்சம் அபராதம் விதித்து 2019 நவ.14ல் உத்தரவிட்டது.
காளிதாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர், 'தண்டனையை நிறுத்தி வைத்து, ஜாமின் அனுமதிக்க வேண்டும். தண்டனையை ரத்து செய்ய வேண்டும்,' என உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவருக்கு ஏற்கனவே உயர்நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமின் அனுமதித்தது.
நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், சி.குமரப்பன் அமர்வு: சையது முகமது கத்தியால் தாக்கி மனுதாரருக்கு காயம் ஏற்படுத்தியுள்ளார். அதிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்வதற்காக மனுதாரர் துப்பாக்கி மூலம் சையது முகமதுவை சுட்டுள்ளார். கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.

